Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 01 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 1 -- கமலாவின் மனோரதம்
"இப்படிப் பயந்து ஓடுவது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை" என்றாள் கமலா."என் மனசை இந்தப் பஸ் கூடப் புரிந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் இப்படி நடு வழியில் நின்று தகறாறு பண்ணுகிறது."
"இந்தா! கமலா, வாயைக் காட்டாதே,அடங்கி இரு" என்று அதட்டினாள் தாயார் காமாட்சி.
"எதற்குக் குழந்தையை அதட்டுகிறாய்?எதோ மனத்தில் பட்டதைச் சொல்கிறாள். விளக்கினால் புரிந்து கொள்கிறாள்" என்றார் மசிலாமணி. "நன்றாக விளக்குங்கள். ஆனால் துடைப்பக் கட்டையைத்தான் எடுத்து வரவில்லை.மற்றச் சாமானன்களோடு அறையில் வைத்துப் பூட்டியாகி விட்டது. அது சரி, ஏங்க எல்லாச் சாமான்களும் பத்திரமாக இருக்கும் இல்லையா...?"
"சரிதான்" என்றாள் கமலா சிரித்துக் கொண்டே. "ஜப்பான்காரனுக்குப் பயந்து சென்னையைவிட்டு வெளியேறி வந்தோம். இப்போ திருடனுக்குப் பயந்து மறுபடியும் சென்னைக்கே போவோம். அங்கே எல்லாச் சாமான்களும் பத்திரமாக இருப்பதைத் தெரிந்து கொண்டு மறுபடியும் ஜப்பான்காரனுக்குப் பயந்து கொண்டு பஸ் ஏறுவோம். மறுபடியும் திருட்டுப் போகுமோ என்ற கவலையில்..."
"ஏண்டி என்னைக் கிண்டலா பண்ணறே?" என்று தாயார் காமாட்சி கோபத்துடன் எழுந்தாள்.
"உஷ்!உட்காரு" என்று அவள் கையைப் பற்றி அமர்த்திய மாசிலாமணி "கமலா நாம் ஜப்பான்காரனுக்குப் பயந்து வெளியேறுவதாக நீ ஏன் நினைக்கிறாய்?" என்றார்."யுத்த முயற்சிகளுக்கு நாம் உதவுகிறோம்.அவ்வளவுதான். ஜப்பான்காரன் வந்தால் பட்டினத்தைப் பாதுகாப்பது மிக முக்கியமான காரியமாகிவிடும். அப்போது போரில் உதவக்கூடியவர்கள் தவிர மற்றவர்கள் நகரத்தைவிட்டு வெளியேறியிருப்பதுதான் அரசாங்கத்துக்கு வசதி. ஜப்பானிய விமானங்கள் வரும்போது அவற்றைச் சுட்டு வீழ்த்துவதா? அல்லது ஊரில் இருக்கிற கிழம் கட்டைகளைக் குண்டு வீச்சிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருப்பதா? அடிபட்ட சோல்ஜர்களுக்குச் சிகித்சை செய்வதா? அல்லது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாண்டேஜ் போட்டு அவர்கள்