சுபாஷ்சந்திரபோஸ் படையிலே சேர்ந்து விடுகிறேன். அவர் என்னைப் பட்டாளத்திலே சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்றாள் கெஞ்சிக் கூத்தாடி நர்ஸாக ஊழியம் செய்யவாவது அனுமதி வாங்கிக் கொள்கிறேன்."
காமாட்சி அம்மாள் இப்போது ஓரேயடியாகப் பயந்து போய்க் கமலாவின் வாயைத் தன் வலக் கரத்தினால் பொத்தினாள்."காலம் கெட்டுக் கிடக்குடி. கதர்ச்சட்டை போட்டுக்கொண்டுகூட, சி.ஐ.டி.கள் உலவி வருகிறார்களாம். ஊர் போய்ச் சேருகிற வரையில் ஒரு வார்த்தை பேசப்படாது நீ ! புரிந்ததா? உம்!" என்று ரகசியக் குரலில் மிரட்டினாள்.
" பேச வேண்டாம் என்றாள் பேசாமல் இருந்து விட்டுப் போகிறேன். ஆனால் நாம் பயந்து கொண்டுதான் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையைமட்டும் என்னிடம் மறைக்கப் பார்க்க வேண்டாம். நான் ஒன்றும் விசுவைப் போல் குழந்தை இல்லை."
"காமாட்சி! கமலாவை என்னவோன்னு நினைத்தேன். எப்படிப் பேசுகிறாள் பார்த்தாயா? இனிமேல் இவளைக் குழந்தையாக நினைக்கக் கூடாது. எல்லா விஷயங்களையும் இவளுக்கும் தெரியப்படுத்தி மனம் விட்டுப் பேச வேண்டியது தான்."
"யார் நினைத்தார்கள், குழந்தை என்று? இரண்டு வருஷமாகச் சொல்லிக்கொண் டிருக்கிறேன். நல்ல வரனாகப் பாருங்கள் என்று. நீங்கதான் எப்ப கேட்டாலும் அவள் என்ன குழந்தைதானே இன்னும் இரண்டு வருஷம் போகட்டும் என்று தட்டிக் கழித்துக் கொண்ட்டிருந்தீங்க."
"கமலா! அம்மா சொல்வதைக் கேட்டாயா? அதையும் உத்தேசம் பண்ணித்தான் இப்போ கிராமத்துக்குக் கிளம்பியிருக்கோம். என் அண்ணா வேதாசலத்தை உனக்கு ஞாபகம் இருக்கோ. என்னமோ? ரொம்ப நாளாச்சு அவன் பட்டினத்துக்கு வந்து. அவன் வீட்டிலே போய் இந்த யுத்தம் முடிகிற வரை இருந்து கொண்டு அப்படியே உனக்கும் ஒரு நல்ல வரனைப் பார்த்து அங்கேயே கல்யாணத்தை முடித்துவிடப் போகிறேன்."
"அப்பா, ஏன் அதோடு நிறுத்தி விட்டீர்கள்? அப்புறம் எனக்கு வளைகாப்பு சீமந்தம் நடந்து, எனக்குப் பெண் குழந்தை பிறப்பதைக் கண் குளிரப் பார்த்து, அவளுக்கு ஆண்டு நிறைவு நடத்தி அட்சராப்பியாசம் செய்து, அப்புறம் பெண்கள் ஆறு கிளாஸுக்கு மேல் படிக்கக் கூடாதென்று சொல்லிப் படிப்பை நிறுத்தி, அவளை யார் தலையிலாவது கட்டி, அவளுக்கு ஒரு குழந்தை