பிறந்து......"
"என்னம்மா அடுக்கிக் கொண்டே போகிறாய்?"
"பின்னே? பெண் ஜன்மத்துக்கு வேறு வேலை என்னப்பா? அடுப்பை ஊதுவதும் குழந்தை பெறுவதும் தானே?"
"கமலா! உன் மனம் இப்போது சரியில்லை. உன்னுடைய ஆசைப் பூனை மாலுவை விட்டுப் பிரிஞ்சு வந்த துக்கத்திலே என்னென்னவோ பேசுகிறாய்" என்றார் மாசிலாமணி.
"இந்தச் சமயத்தில் அதோ பாருங்க, அதோ!" என்றாள் காமாட்சி.
"என்ன? என்ன?" என்றனர் மற்ற இருவரும் ஏக காலத்தில். காமாட்சி அம்மாள் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தார்கள். ஏழெட்டுக் குரங்குகள் நெடுஞ்சாலையில் ஒரு பக்கத்து மரத்திலிருந்து இறங்கிச் சாலையைக் கடந்து எதிர்ப் பக்கம் சென்றன. அங்கே ஒரு மரத்தின் மேல் ஏறத் தொடங்கின. அந்த மரத்தில் இருந்த பறவை இனங்கள் தங்கள் அமைதிக்குப் பங்கம் வந்து விட்டதாக ஏக காலத்தில் கிறீச்சிட்டு அலறின. அந்தக் குரங்குகளுள் சில தாய்க் குரங்குகள், அவற்றின் வயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தன. அதைக் கவனித்த கமலா, "என்னைப் போன்ற பெண்களுக்கும் அந்தக் குரங்குகளுக்கும் என்ன வித்தியாசம்?" என்று முணுமுணுத்தாள்.
அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவர் போல், "அந்த இரட்டை வால் எங்கே?" என்று சத்தம் போட்டார் மாசிலாமணி.
குரங்குகளைப் பார்த்ததும்தான் பிள்ளை ஞாபகம் வந்ததாக்கும்?" என்று முகத்தைத் தோளில் இடித்துக் கொண்டாள் காமாட்சி.
"பஸ்ஸைவிட்டு இரங்காதேடா என்று அடித்துக் கொண்டேன். கேட்டானா? இப்போ பஸ் திடீரென்று கிளம்பி ஓட ஆரம்பித்து விட்டால் என்ன பண்ணுவது?" என்று அங்கலாய்த்தாள்.
"நான் பார்த்து விட்டு வருகிறேன்" என்று கூறிப் பெற்றோர் தடை ஏதும் விதிப்பதற்கு