முன்னால் 'சரேல்' என்று எழுந்து இறங்கி விட்டாள் கமலா. அவளுக்கு உடலும் உள்ளமும் வேக வேக உள்ளே அமர்ந்திருப்பது வேதனையாக இருந்தது.
வெளியே சென்று பார்த்தவள் முகத்தில் புன்னகை அரும்பியது. சில நிமிஷங்களுக்குப் பிறகு மறுபடியும் பஸ்ஸுக்குள் ஏறி வந்து, "அப்பா தம்பி விசு குறைச்சலா மார்க் வாங்கும் போதெல்லாம் ஒன்றுக்கும் பிரயோசனமில்லை; உருப்படாத கழுதை என்று திட்டுவீர்களே, நீங்க நினைத்தது தப்பு. அவன் எப்படியும் பிழைத்துக் கொள்வான். கரி பஸ்தானே இது? பின்னாலே இருக்கிற இஞ்சினின் பிடியைப் பற்றிச் சுழற்றிக் கொண்டிருக்கிறான். 'ஙொய், ஙொய்' என்று சத்தம் கேட்கிறதே அது தான். கண்டக்டருக்குக் கை வலி எடுத்து விட்டதாம். இவன் தன் கை வரிசையைக் காட்டுகிறான்.
"இப்படி எதையாவது பண்ணிவிட்டு இராத்திரி முழுவதும் கைவலி, கால் வலி என்று அழுது என் பிராணனை வாங்கப் போகிறான்" என்று காமாட்சி அம்மாள் அலுத்துக் கொண்டாள். "அது கிடக்கட்டும், இப்போ நிலைமை என்ன? பஸ் புறப்படுமா, இல்லையா?"
அவர் கேள்விக்குப் பதில் சொல்வதுபோல் பஸ் கண்டக்டர் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு பஸ்ஸுக்குள் ஏறி வந்தார். "ஸார்! இஞ்சின் ரிப்பேர். அவங்கவங்க பஸ் டிக்கட்டை எடுத்துக் கொடுத்தீங்கன்னா பாக்கிப் பணம் வாபஸ் பண்ணுகிறேன். அல்லது அடுத்த பஸ் வரும் வரை காத்திருங்க. இடமிருந்தால் ஏறிக் கொள்ளலாம்" என்றார்.
"அட கடவுளே!" என்று மாசிலாமணி, "இந்த இழவுக்காகத்தானா அத்தனை பாடுபட்டு கறுப்பு மார்க்கெட்டில் இரண்டு மடங்கு தொகை கொடுத்து டிக்கெட் வாங்கினேன்!"
"அது என்ன கல்யாணம்? என்னிடம் சொல்லவே யில்லையே?" என்றாள் காமாட்சி அம்மாள்.
"சொன்னால் நீ எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் சம்பாதித்துத் தந்து விடப் போகிறாயாக்கும்" என்று கடுகடுத்தார் மாசிலாமணி. ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை. 'உட்கார இடமிருந்தால் போதும்' என்றேன். 'ஒண்டிக் கொள்ளக் கூட இடம் கிடையாது' என்று சொல்லிட்டான். அப்புறம்தான் இந்த பஸ்ஸுக்கு டிக்கெட் வாங்கித் தொலைச்சேன், அதுவும் பிளாக்கிலே."
"எந்த வேளையில் வீட்டை விட்டுப் புறப்பட்டோமோ?" என்றாள் காமாட்சி. "பஞ் சாங்கத்தைப்