Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 02 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 2 -- வசீகரப் பார்வை
மாசிலாமணி குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதங்கள் நடக்குமென்றாலும் ஒருவரோடு ஒருவர் அன்பாலும் பாசத்தாலும் பிணைக்கப் பட்டிருந்தனர். கமலாவின் ஆசைகள் லட்சியங்கள் வேறாக இருந்தாலும் பெற்றோரை எதிர்த்துக் கொண்டு எதையும் செய்யக் கூடிய பெண் அல்ல அவள்.
சென்னையில் அவர்கள் குடித்தனத்தைக் காலி செய்துவிட்டு நாலு வீடுகளுக்கு அப்பால் ஓர் இல்லத்தில் ஓர் அறையை மட்டும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் எல்லாச் சாமான்களையும் போட்டுப் பூட்டி விட்டு, அத்தியாவசியமானதும் விலையுயர்ந்ததுமான உடைமைகளுடன் மட்டும் புறப்பட்டிருந்தார்கள்.
அவர்களைப் போலவே ஏராளமான குடும்பங்கள் பட்டணத்தை விட்டுக் கிளம்பியிருந்தன. எனவேதான் பஸ், ரயில் முதலியவற்றில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாயிருந்தது. ஜப்பானியர் குண்டு வீசப் போகிறார்கள் என்ற பீதியில் பஸ், ரயிலில் மட்டுமின்றிக் குதிரை வண்டியிலும் ரேக்ளாவிலும் ஏன் கால்நடையாகக் கூடச் சென்றவர் உண்டு.
'வருகிறேன்' என்று அண்ணா வேதாசலத்துக்கு ஒரு கார்டு எழுதிப் போட்டு விட்டுப் புறப்பட்டு விட்டார் மாசிலாமணி. ஆனாலும் உள்ளூர அவருக்குக் கவலைதான். கிராமத்தில் வரவேற்பு எப்படி இருக்குமோ? குடும்பத்தோடு போய் டேரா போட்டால் மன்னி என்ன சொல்லுவாளோ? நாலு நாளா, ஒரு வாரமா, மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கூட ஆகலாம், யுத்தம் முடிவதற்கு. ஏதோ சேமித்து வைத்த பணம் கொஞ்சம் இருக்கிறது. அண்ணா முதலில், 'இதெல்லாம் எதுக்குடா' என்று மறுதளித்தாலும் பின்னர் மன்னியின் போதனைக்கு இணங்கப் பணத்தை வாங்கிக் கொள்வார். நிச்சயம். ஆனால் அதுவும் எத்தனை நாளைக்கு வரும்? கமலாவின் கல்யாணத்தைப் பற்றிச் சற்று முன் பேசினேனே, அதை எப்படி நடத்தப் போகிறேன்?
இப்படி எத்தனையோ பெரிய கவலைகள் அவரை ஆட்கொண்டிருந்த போதிலும் அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு இப்போது ஓர் உடனடிக் கவலை முதல் கவலையாக விசுவரூபம் எடுத்தது. இரவு எங்கே தங்குவது என்ற பிரச்னைதான் அது. பஸ்