இவர்களை வீட்டை விட்டுப் போகச் சொல்ல மனமில்லை" என்றார்.
"இப்படி நீங்கள் சொல்வீர்கள் என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியும். இல்லா விட்டால் இவர்களை இவ்வளவு நம்பிக்கையுடன் இங்கே அழைத்து வந்திருப்பேனா? உங்களுடைய பரோபகார குணம்...."
"சரி! சரி! இப்படியே முகஸ்துதி பண்ணி வாடகைக்கு நாமத்தைப் போட்டு விடப் பார்க்காதே. ஒரு நாள் தங்கினாலும் ஒரு மாத வாடகை!"
"ஒரு மாத வாடகை என்ன? மூன்று மாத வாடகையே வாங்கிக் கொள்ளுங்கள். இவர்களும் அவ்வளவு அவசரமாகக் கிளம்பப் போவதாகத் தெரியவில்லை."
"மாதம் எழுபத்தைந்து ரூபாய். காலணா குறைக்க முடியாது. சுவரிலே ஆணி கீணி அடிக்கக் கூடாது. சிம்னி விளக்கை எரிய விட்டு புகை அடையச் செய்யக் கூடாது. அடிக்கடி ஒட்டடை அடித்துச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்."
"அதற்கெல்லாம் நான் பொறுப்பு; வாருங்கள் போகலாம்" என்று கல்யாணம் ரங்கநாதனை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
கமலா விசுவிடம், "அந்த மாமாவுக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லுடா" என்றாள்.
விசு வாய் திறப்பதற்குள்ளாகக் கல்யாணம் கமலாவைத் திரும்பிப் பார்த்து, "இப்படிப் போகிற போக்கில் தாங்க்ஸ் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பெரியவரை அவர் வீட்டில் இறக்கி விட்டுத் திரும்பி வந்து சாவகாசமாகக் கேட்டு வாங்கிக்கொள்கிறேன்" என்றான்.
கமலாவின் நெஞ்சு கிளுகிளுத்தது.
தொடரும்...