Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 05 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 5 - பூட்டு திறந்தது!
பூட்டிக் கிடந்த ஒரு பழைய வீட்டின் வாசலுக்கு வந்து சேர்ந்ததும் கல்யாணசுந்தரம் காரை சாலை ஓரமாய் நிறுத்தினான். "இதுதான் வீடு. ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி யிருக்கிறது. மதராஸ்காரர்கள் வந்து தங்குவது என்றால் சாமானியமா?" என்றான்.
"ராமப்பட்டணமே அதிர்ஷ்டம் பண்ணியிருப்பதாகச் சொல்லுங்கள். சென்னையிலே யிருந்து இந்த ஊருக்கு ஏகப்பட்ட பேர் வந்து டேரா போட்டிருப்பதாகக் கூறினீர்களே!" என்ற மாசிலாமணி, கார்க் கதவைத் திறக்கத் தெரியாமல் தவித்தார். அதே போல் பின் ஸீட்டில் காமாட்சி அம்மாளும் யாரேனும் கதவைத் திறந்துவிடக் காத்திருந்தாள். விசு, "கார்க் கதவைத் திறக்கக் கூடவா தெரியாது?" என்று பெரிய மனுஷ தோரணையில் கேட்டு விட்டுச் சட்டென்று இறங்கி, படீரென்று தன் பக்கத்துக் கதவைச் சாத்தினான்.
கல்யாணத்தின் காதில் அந்த ஓசை நாராசமாக விழுந்தது. முகத்தைச் சுளுக்கிக் காதுகளைப் பொத்திக் கொண்டு, "அப்பனே, உனக்குக் கார் கதவைத் திறக்கத் தெரிகிறது; ஆனால் சாத்தத் தெரியவில்லை. கொஞ்சம் மெதுவா மூடு. என்னதான் வெள்ளைக்காரர் தயாரித்த காரானாலும் இந்தப் போடு போட்டால் தாங்காது" என்று கூறியபடியே இறங்கினான். இதற்குள் விசு மற்றவர்கள் இறங்கக் கதவுகளைத் திறந்தான். கல்யாணம் டிக்கியைத் திறந்து விட்டு விட்டுக் காரின் கூரைமேல், காரியரில் இருந்த சாமான்களை இறக்க ஆரம்பித்தான்.
மாஜி சென்னைவாசிகள் ரொம்பக் கரிசனத்தோடு, "நீங்கள் சிரமப்பட வேண்டாம். நாங்க இறக்கிக் கொண்டு போய் வைக்கிறோம்" என்று உபசாரமாகச் சொன்னார்களே ஒழிய கல்யாணசுந்தரம் காரியம் செய்வதை யாரும் தடுக்கவில்லை. பெட்டியை ஒரு கையிலும் ஒரு பெரிய கூடையை மற்றொரு கையிலும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்த கல்யாணம், பளு தாங்காததால் கூடையை திண்ணையின் மேல் 'ணங்' கென்று வைத்தான்.