நான்தான் சொன்னேனே ரொம்பப் பழங்காலத்து வீடு" என்றாள்.
கமலா கணப்பொழுதும் வீணாக்காமல் பின்கட்டில் அகப்பட்ட ஒரு துடைப்பத்தைக் கொணர்ந்து முற்றத்தை ஒட்டினாற்போலிருந்த இடத்தைத் துப்புரவாகப் பெருக்கினாள். மேஜை நாற்காலிகளைத் துடைத்தாள். சாமான்களை அவளும் விசுவுமாக உள்ளே எடுத்து வந்து வைத்தார்கள்.
இன்னும் சில நிமிஷங்களில் நன்றாக இருட்டிவிடும் என்று உணர்ந்தவளாக அவசரம் அவசரமாகக் கொல்லைப்புறம் சென்று கிணற்றிலிருந்து ஒரு குடம் நீர் இழுத்து முகம் கழுவினாள். மறுபடியும் உள்ளே வந்து முகத்தைத் துடைத்துப்பவுடர் போட்டுக் கொண்டாள். முற்றத்தில் மட்டுமே இருந்த வெளிச்சத்தில் நெற்றிக்கு இட்டுக் கொண்டாள்.
ஸ்விட்ச் இருக்கிற இடமே தெரியவில்லையே?" என்று காமாட்சி அம்மாள் சுவர்களில் தேடினாள்.
"விளக்கு இருந்தால்தானே ஸ்விட்ச் இருக்கும்? வீட்டுக்கு மின் இணைப்பே கிடையாது" என்றார் மாசிலாமணி.
"அட கடவுளே! போயும் போயும் இப்படிப்பட்ட வீடுதானா கிடைத்தது உங்களுக்கு?"
"வாயை மூடிக் கொண்டு இரு. இன்று ராத்திரி தங்குதற்கு இடம் கிடைத்ததே அதைப் பார்க்கலை? புகார்களை அடுக்க ஆரம்பித்து விட்டாள்!" என்றார் மாசிலாமணி.
"நீங்கள் எதற்கு என்மேல் எரிஞ்சு விழறேள்? அந்தப் பிள்ளையாண்டான் நல்ல மாதிரியா இருக்கான். அவனிடத்திலே சொன்னால் எல்லாம் சரிப்படுத்தித் தருவான். ஒரு நாள் இரண்டு நாள் இருந்தாலும் எதற்காக அசௌகரியப்பட்டுக் கொண்டு இருக்கணும்?"