"ஐயோ போச்சு! போச்சு! ஊறுகாய் ஜாடி யெல்லாம் உடைஞ்சிருக்கும். இதற்குத்தான் அவரைத் தூக்கச் சொல்லாதே. நீ எடுத்துக்கோ என்று சொன்னேன், கேட்டியா?" என்றாள் காமாட்சி அம்மாள் கமலாவைப் பார்த்து.
"பாதகம் இல்லை அம்மா! இவர் கார்க் கதவை விசு உடைத்ததற்கும் இவர் நம் ஊறுகாய் ஜாடிகளை உடைத்ததற்கும் சரியாய்ப் போய் விட்டது" என்றாள் கமலா.
அவள் ஒரு பெட்டியையும் படுக்கையையும் தூக்கிக் கொண்டு வாசல் பக்கம் வந்து கொண்டிருந்தாள்.
"இப்படிக் கொடு" என்று கை நீட்டினான் கல்யாணம். "படுக்கையை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். பெட்டி என்ன தான் சீமையிலே தயாரானதானாலும் உங்களுடைய தகலடித் தாக்குதலைத் தாங்காது" என்றாள் கமலா.
அவன் சிரித்துக் கொண்டே படுக்கையை வாங்கிக் கொண்டு போய்ப் படியேறித் திண்ணையில் தொப்பென்று போட்டுவிட்டு வேகமாய்த் திரும்பிய சமயம் கமலா கடைசிப்படி ஏறிக் கொண்டிருந்தாள். அவன் மீது இடித்து விடாதிருக்க அவள் இப்பால் நகர அவனும் அதே நேரத்தில் அதே திசையில் நகர, இவள் உடனே எதிர்ப் பக்கம் பாய அவனும் அதையே செய்ய... இப்படி மூன்று நாலு தடவைகள் தடுமாறும்படியாகிவிட்டது.
"இது என்ன, இவா இரண்டு பேரும் வீட்டு வாசல்லே பால்ரூம் டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டா?" என்றான் விசு, தான் பார்த்த ஓர் ஆங்கிலப் படத்தை நினைவுக்குக் கொணர்ந்தவனாக.
"அசடு! தத்துப் பித்தென்று பேத்தாதே" என்று காமாட்சி அம்மாள் அதட்டினாள்.