கமலா வெட்கமடைந்தவளாகப் படிகளை விட்டு இறங்கி ஓரமாய் ஒதுங்கி நின்றாள்.
"சற்று நேரம் திண்ணையில் உட்கார்ந்திருங்கள். வீட்டுச் சொந்தக்காரரிடம் சாவி வாங்கிக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கல்யாணம் மறுபடி காரில் ஏறி அதைக் கிளப்பிக் கொண்டு போனான்.
"ரொம்பப் பழங்காலத்து வீடு" என்றாள் காமாட்சி அம்மாள்.
"வீடு என்று கிடைத்தால் போதாதா? இதுவே சைதாப்பேட்டையில் இருந்தால் ஐம்பது ரூபாய் வாடகை கேட்பார்கள்." என்றார் மாசிலாமணி முதலியார்.
"இப்போது யார் வாடகை கொடுக்கிறார்கள். எல்லாரும்தான் ஜப்பான்காரனுக்குப் பயந்து விழுந்தடித்துக்கொண்டு ஓடுகிறார்களே" என்றாள் கமலா.
"நாம் மட்டும் பயப்படாமல் என்ன செய்தோமாம்?" என்றான் விசு.
"நாம் எங்கேடா பயந்தோம்? பீதியல்லவா அடைந்தோம். ஒரே கிலி!" என்றாள் கமலா.
விசுவினால் சும்மா உட்கார்ந்திருக்க முடிய வில்லை. கதவருகே போய்ப் பூட்டைப் பிடித்து இழுத்தான். பூட்டு திறந்து கொண்டது.
"பார்த்தீர்களா! ஒரு 'மாஜிக்' செய்தேன். பூட்டுத் திறந்து கொண்டது. வாருங்கள்! வாருங்கள்!" என்றான் விசு.
எல்லோரும் உள்ளே போனார்கள். காமாட்சி அம்மாள் விடுவிடு என்று வீட்டைச் சோதித்து விட்டு வந்து, "சமையலறை கொஞ்சம் கூட வசதியாய் இல்லை. அம்மி, கல்லுரல் ஒன்றும் கிடையாது. அடுப்பு இடிந்து கிடக்கிறது.