அவருடைய மேனாட்டு மோகத்துக்கு விழும் அடி, இது அவர் பொறாமை மீது விழும் அடி. இது அவர் காதல் மேல் விழும் அடி' என்று மனசுக்குள் கூறிக் கொண்டே போடு போடென்று போட்டான். கடைசியில், 'இது அவர் தலைமீதே விழும் பலத்த அடி' என்று எண்ணியவாரு சுத்தியை வீசியபோது அது ஆணியைத் தாக்காமல், அவன் விரலை நன்றாகப் பதம் பார்த்து விட்டது.
கல்யாணம், 'ஆ' வென்று அலறியபடி கையை உதறினான்.
"ஐயோ! விரலில் ரத்தம்" என்றான் விசு. கல்யாணம் பல்லைக் கடித்தபடி வலியைப் பொறுத்துக் கொன்டு "பாதகமில்லை, வீடு போய்ச் சேர்ந்து மருந்து போட்டுக் கொள்கிறேன். இப்போதைக்கு ஒரு வெள்ளைத் துணி இருந்தால் தண்ணீரில் நனைத்துக் கட்டலாம்" என்றான்.
கதிகலங்கிப் பிரமித்துப் போய் நின்ற கமலா சுய நினைவு பெற்றவளாக நடுங்கும் குரலில் "இதோ கொண்டு வருகிறேன்" என்று கூறி ஓடிச் சென்று தனக்குப் பிடித்தமான பூப்போட்ட கைக்குட்டை ஒன்றை நனைத்து எடுத்து வந்தாள்.
"இங்கே கொடுங்கள். நானே கட்டிக் கொள்கிறேன்" என்றான் கல்யாணம்.
"இல்லை. ஒற்றைக் கையால் கட்டிக் கொள்ள வராது. நானே கட்டி விடுகிறேன்"என்றால் கமலா.
அவள் கட்டுப் போட்ட போது தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தாள். கல்யாணமும் பரிவு மேலோங்க அவளைக் குனிந்து நோக்கினான்.
அந்தக் கண்களை அதிக நேரம் உரையாட அனுமதியாமல், விசுவம், "அழகாய்த்தானிருக்கிறது. காயம் பட்டது இடது கை, அக்கா வலது கையைப் பிடித்துக் கொண்டு கட்டுப் போடுகிறாளே" என்றான்.
"அடேடே! நான் கூட கவனிக்கவில்லை" என்றான் கல்யாணம்.