வந்ததா என்று கூற முடியாது. ஆனால் ஓரிரு கணங்களே நீடித்த அந்தப் பார்வை கல்யாணத்தின் அந்தராத்மாவையே ஊடுருவி ஒரு குலுக்குக் குலுக்கி விட்டதென்னவோ உண்மை. அவள் 'விருட்'டென்று திரும்பி உள்ளே சென்றாள்.
"கல்யாணப் பேச்செடுத்தாலே இந்தப் பெண்ணுக்கு ஒரே சங்கோஜம்" என்று காமாட்சி கூறியது கல்யாணத்துக்கு ஏதோ கனவில் கேட்பது போலிருந்தது.
மறுநாள் காலை பவானி டென்னிஸ் உடையில் மாஜிஸ்திரேட்டைச் சந்தித்தபோது மிகுந்த உற்சாகத்துடன் இருந்தாள். "என்ன சரித்திரக் கதைகளில் வருகிற கதாநாயகன் மாதிரி எனக்காக வாளேந்திப் போரிடவே ஆரம்பித்து விட்டீர்களாமே?" என்றாள்.
"என்ன சொல்கிறாய் நீ?" என்று கோவர்த்தனன் ஒன்றும் தெரியாதவர் போல் வினவினார்.
கல்யாணம் கூறியதை யெல்லாம் பவானி விவரித்ததும், "அடப் பாவமே! அந்தத் தறுதலை அப்படியா சொன்னான்? பெரிய கில்லாடி தான்!" என்றார்.
"சே! அவரை அப்படி யெல்லாம் ஏசாதீர்கள்" என்றாள் பவானி.
"பின்னே கதையை அப்படியே தலை கீழாக மாற்றிவிட்டால் என்ன அர்த்தம்? பவானி! அவன் நேற்று மாலை என்னிடம் வந்து என்ன சொன்னான் தெரியுமா? நீ தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாய் என்றால் சொல்கிறேன்."
"பாதகமில்லை சொல்லுங்கள்."
"அவனுக்கு உன்மீது காதலாம். ஆனால் நீயோ என்மீது உயிரையே வைத்திருக்கிறாயாம். அதனால் அவனை லட்சியம் பண்ணவே மாட்டேன் என்கிறாயாம். ஆக, அவன் கண்களுக்கு நான் பெரிய வில்லனாகக் காட்சியளிக்கிறேன்!"
"அழகுதான்!" என்று கூறிச் சிரித்தாள் பவானி. "அப்புறம்?"
"இவன் அப்பாவுக்கு இங்கே பக்கத்தில் உள்ள ஏலமலையில் ஹிமகிரி எஸ்டேட் என்று