"அப்படி யொன்றும் இல்லை. ராமப் பட்டணமே மலை வாசஸ்தலம் போல் குளிர்ந்து காணப்படுகிறது எனக்கு. நீங்கள் இங்கு குடியேறிய பிறகு!"
"அழகுதான், எனக்கு மலைச் சாரல்களையெல்லாம் பார்க்க ரொம்பப் பிடிக்கும். உங்கள் பெற்றோர் எப்போது புறப்படுகிறார்கள், சொல்லுங்கள். அவர்களுடன் நான் போகிறேன்; நீங்கள் வேணுமானால் இங்கேயே இருந்து சமூகப் பணிகளைச் சிரத்தையாகக் கவனித்துக்கொண்டிருங்கள்!"
"சரி, அப்படியே செய்வோம்! அந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டியாகி விட்டது. இப்போது காரில் ஏறலாம் அல்லவா?" என்றான் கல்யாணம்.
பவானி சிரித்துக் கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள். "நானும் சீக்கிரத்தில் ஒரு கார் வாங்கப் போகிறேன்" என்றாள்.
"போச்சுடா! உங்களுக்கு அவ்வப்போது ஒரு லிஃப்ட் தருகிற திருப்தியாவது எனக்கு இருந்தது. அதற்கும் ஆபத்து வந்து விட்டதா?" என்றான் கல்யாணம்.
"நீங்கள் தாராள மனமுடையவராக இருப்பதால் அளவுக்கு மீறி உரிமை எடுத்துக் கொள்ளலாமா நான்? கடைசியில் நான் காரில் ஏறுவதே பெரிய தொந்தரவாக நீங்கள் எண்ணும் காலம் வந்துவிடும்."
"நீங்கள் புதுக் கார் வாங்கின மறு நாளே இந்தக் கார் ரிப்பேராகிவிடும் பாருங்கள். அப்புறம் நான் உங்களிடம் அடிக்கடி லிஃப்ட் கேட்பேன். அப்போது என்ன பண்ணுவீர்கள்? இது ஏதடா பெரிய தொந்தரவாப் போச்சு என்று நினைப்பீர்களா?"
பவானி கலகல வென்று சிரித்தாள். "உங்கள் தகப்பனார் இந்த வட்டாரத்திலேயே பெரிய வழக்கறிஞர் என்று பெயர் வாங்கியதில் அதிசயமில்லை. நீங்களே இந்தப் போடுபோடும்போது அவர் எதிர்த்தரப்பு வக்கில்களை என்ன பாடு படுத்துவார் என்று ஊகிக்க முடிகிறது."