"ஜாக்கிரதையாக இருக்கிறேன், மாமா!" என்று கூறிய பவானி பைனாகுலர் வழியே தொலைவில் பட்சிகள், மிருகங்கள் ஏதும் தெரிகின்றனவா என்று பார்த்தாள்.
அவ்விதம் நோக்கியபோது அவள் திகைப்பும் வியப்பும் அளிப்பதான ஒரு காட்சியைக் கண்டாள்.
கீழே வெகு தூரத்தில் ஒரு மொட்டைப் பாறை மேல் பெண் ஒருத்தி நிற்பது தெரிந்தது. அவள் புடவைத் தலைப்பை நெஞ்சோடுகொணர்ந்து பின்னால் தொங்கவிடாமல் இடக் கரத்தால் ஒரு முனையை உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள். மலைக்காற்றில் அந்தத் தலைப்பு படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.
பவானி வைத்த கண் வாங்காமல் அவளைச் சற்று நேரம் பார்த்தாள். அவள் ஆத்மப் பிரதட்சணம் செய்வது போல் மெல்லத் திரும்பி நாலாபுறமும் பார்வையைச் செலுத்துவதைக் கண்டாள்.
ஏதோ கிட்டாத விடுதலைக்காக அவள் ஏங்குவது போலவும் அங்கே வந்து நின்று போலியான ஒரு சுதந்திரத்தைச் சற்று நேரம் அனுபவித்துவிட்டுத் திரும்ப எண்ணுவது போலும் பவானிக்குத் தோன்றியது. அப்படி சுதந்திரப் பறவையாயத் தன்னைச் சற்று நேரம் பாவித்துக் கொண்டு தாற்காலிக மன ஆறுதலையேனும் அடைய எண்ணும் அந்தப் பெண் யார்? பைனாகுலர் வழியாகப் பார்த்தாலும்கூட இத்தனை தூரத்திலிருந்து இன்னார் என்று இனம் கண்டு கொள்வது கஷ்டம். 'ஆயினும்.....அவள்........ஒரு வேளை கமலாவாக இருக்கலாமோ? என்று பவானிக்குத் தோன்றியது.
உடனேயே அப்படி இராது என்றும் நினைத்தாள். 'கமலா தன்னந் தனியாக இப்படிக் கிளம்பி வருவாளா?.....ஏன் வர முடியாது? பஸ் ஏறி மலைப் பாதையில் சற்றுத் தூரம் வந்த பிறகு இறங்கிக் கொண்டிருக்கலாம் இல்லையா? ஆனால் பார்க்கப் பழக அவள் அத்தனை கட்டுப்பெட்டியாக இருக்கிறாளே.....? இருந்தாலென்ன? அப்படிப் பட்டவர்கள்தான் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ளுகிற நெஞ்சழுத்தம் உள்ளவர்களாகவும் விளங்குவார்கள். யாரும் எதிர் பார்க்க முடியாத காரியங்களைத் திடும்மென்று செய்து வைப்பார்கள்....... சேச்சே, இது கமலாவாக இருக்க முடியாது.......ஆனால் இல்லை......ஏன், கீழே திரும்பவும் இறங்கிச் சென்றதும்