விசு ஸ்டீரிங்கிலிருந்து கரத்தை எடுத்து விட்டு அமர்ந்தான்.
"கஷ்டமோ நஷ்டமோ இல்லை என்றால் கிரீஸ் போட எதற்குக் கல்யாணம் மாமாவைக் கூப்பிட வந்தாய்?" என்றாள் பவானி.
"ஐய்யய்யே இதுகூடப் புரியலையா உனக்கு? கமலா அக்காவுக்குக் கல்யாணம் மாமா மேலே லவ்! அவரை அடிக்கடி பார்க்கலைன்னா இவளுக்குப் பித்துப் பிடித்த மாதிரி ஆயிடும். அதனால் தான். ஆணி அடிக்கணுமா கல்யாணம் மாமாவைக் கூப்பிடு. துணி உலர்த்தக் கம்பி கட்டணுமா கல்யாணம் மாமாவைக் கூப்பிடுன்னு என் பிராணனை வாங்கறா."
பவானிக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது. வியப்பாகவும் இருந்தது. "இந்தா விசு! நீ சின்னப் பையன். இப்படி யெல்லாம் பேசக் கூடாது" என்றாள்.
"கமலா அக்காவுக்குக் கல்யாணம் மாமா மேலே லவ் என்றால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வரது? உங்களுக் கும் கல்யாணம் மாமா மேலே லவ்வா?" என்றான் விசு.
"ஏய், அசடு! சினிமா டிராமாவிலே எதையாவது பார்த்துவிட்டு உளறாதே! சமர்த்தா இருக்கணும், புரிந்ததா?"
"சரி" என்றான் விசு.
இதற்குள் வீடு வந்து விட்டது. விசு கீழே இறங்கிக் கோபத்தோடு வேகமாகப் படாரென்று கதவைச் சாத்தினான். பவானிக்குத் தூக்கி வாரிப் போட்டது! அவனை அதட்டியதற்குப் பழி வாங்கி விட்டானே! புத்தம் புதுக் கார். கதவு கழன்று விழாததே அதிசயம்தான்.
ஒரு பக்கம் கோபமும் ஒரு பக்கம் அவன் போக்கிரித்தனத்தை நினைத்துச் சிரிப்பும் பொங்க அவள் கீழே இறங்கினாள். வீட்டுக்குள் நுழைவதற்கு முன் இம்முறை கார் இடதுபுறமாக நிற்கிறதா என்று பார்த்துக் கொண்டு சரியாகப் பூட்டிக் கொள்ளவும் செய்தாள்.
----------------
தொடரும்...