(Reading time: 7 - 13 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

"அப்படியெல்லாம் செய்வேனா பவானி? நீ என்ன பட்டிக்காட்டுப் பெண்ணா? உன் விருப்பத்தைத் தெரிந்துகொள்ளாமல் ஒப்புதல் அளிப்பேனா?"

  

"நல்ல வேளை!" என்று பெருமூச்செறிந்தாள் அவள்.

  

"நல்ல நாளும் வேளையும் பார்க்க வேண்டியதுதான்" என்றார் குணசேகரன். "மாஜிஸ்திரேட் ரொம்ப நல்லவர். கௌரவமான உத்தியோகம். ஹைகோர்ட் ஜட்ஜ் வரை பதவி உயரலாம். உன்னை மனமார விரும்புகிறார் என்று நிதரிசனமாய்த் தெரிகிறது. நிச்சயமாய் நீ தொழில் நடத்துவதற்கு முட்டுக்கட்டை போட மாட்டார். இதைவிட நல்ல வரன் எங்கே கிடைப்பான்? ஒவ்வொருத்தர் பெண்ணைப் பெற்று விட்டு மாப்பிள்ளை தேடி நாயாய் அலைகிறார்கள். இங்கேயோ முதல்தர மாப்பிள்ளை நம் வீடு தேடி வந்திருக்கிறார். ஒரு வார்த்தை "சரி" என்று சொல். உடனே உன் பெற்றோருக்குத் தந்தி அடித்து வரவழைக்கிறேன்."

  

"மாமா! மேன்மைதங்கிய பிரிட்டிஷ் அரசரின் மகத்தான தபால் தந்தி இலாகாவுக்கு ஒன்றே முக்கால் ரூபாய் நஷ்டம். நீங்கள் தந்தி அனுப்பப் போவதில்லை" என்றாள் பவானி.

  

"ஏன் அம்மா? மாஜிஸ்திரேட் கோவர்த்தனனிடம் என்ன குறையைக் கண்டாய்?"

  

"அவருக்கு ஒரு குறையும் இல்லை. மன்மதன் போலிருக்கிறார் என்று சர்ட்டிபி கேட் வழங்க வேண்டுமா? நான் தயார். ஆனால் எனக்குத்தான் திருமணத்தில் நாட்டம் இல்லை."

  

"ஏன் அப்படிச் சொல்கிறாய் பவானி? ஒரு வேளை.... அந்தப் பையன் கல்யாணம்."

  

"மாமா! கல்யாணத்தையும் என்னையும் சம்பந்தப்படுத்திக் கோவர்த்தனன் ஏதாவது பிதற்றியிருந்தால் அதை மறந்து விடுங்கள். எனக்கும் அவருக்கும் இடையே தொழில் ரீதியாகவும் சமூகப் பணியாற்றுவதிலும் உள்ள தொடர்பு தவிர வேறு பிணைப்பு எதுவும் கிடையாது. நீங்கள் ஏதாவது கூறப்போக அது அந்தப் பெண் கமலாவின் காதில் விழுந்து விட்டால் போதும். மேலே பாய்ந்து பிடுங்கிவிடுவாள் உங்களை."

  

"அவள் என்ன நாயா? புலியா?"

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.