Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 27 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 27 -- செல்வம் பேசுகிறது!
ரங்கநாத முதலியார் குறிப்பிட்டிருந்த தினத்தில் அவர் சொன்னது போலவே ராகு காலம் கழித்து மாசிலாமணி முதலியாரும் மனைவி காமாட்சியும் அவர் வீட்டுக்குப் போனார்கள். அந்தப் பெரிய வீட்டையும் அதிலிருந்த ஐசுவரியத்தையும் கண்டு பிரமித்தார்கள்.
விசாலமான தோட்டத்தில் குரோட்டன்ஸ், பூகன்விலா, மல்லி, ரோஜா, செம்பருத்தி, இருவாட்சி என்று பல ரகச் செடிகளில் பூக்கள் சிரித்தன. பின்புறம் வாழை, மா, பலா, என்று பல ரக பழ மரங்கள் காட்சியளித்தன. 'போர்ட்டிகோ' வுக்கு முன்னால் வட்டமான புல்தரை. அதற்கு நீர் தெளிப்பதுபோல் அதன் மையத்தில்ல் சுழன்றது 'ஃபவுண்டன்' நான்கைந்து தோட்டக்காரர்கள் சுருசுருப்பாக இயங்கிக் கொண் டிருந்தனர். தோட்டத்தைக் கடந்து படியேறியதும் வாசல் கதவருகே இருபுறமும் பிரும்மாண்டமான இரண்டு யானைத் தந்தங்கள். உள்ளே கூடத்தின் சுவரில் புலி, மான் தலைகளும் சில புகைப்படங்களும் காணப்பட்டன. தரையில் கரடித் தோல் விரிப்பாகி யிருந்தது. அதன் பக்கத்தில் தந்தம் இழைத்த வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய கனமான டிபன் மேஜை. அதன் மூன்று புறங்களிலும் அமர்ந்தால் ஆள் இருக்கிற இடம் தெரியாமல் அமுங்கிவிடுகிற மாதிரியான உயர் ரக சோபாக்கள். நிலைவாசல்களில் தொங்கிய மணித் திரைகள், கூரையிலிருந்து தொங்கிய லஸ்தர் விளக்குகள்.
தங்கள் கால் பட்டுத் தரை அழுக்காகி விடுமோ என்று அஞ்சியவர்களாக வராந்தாவில் நின்றார்கள் மாசிலாமணியும் காமாட்சியும்.
"ஸார்!" என்று குரல் கொடுத்தார், மாசிலாமணி.
"யாரு?" என்று கேட்டுக் கொண்டே வந்தார் கணக்குப்பிள்ளை.
"ரங்கநாத முதலியார் இருக்கிறாரா? எங்களை இன்று இந்த நேரத்துக்கு வரச்சொன்னார்."
அவர்களை மேலும் கீழுமாகப் பார்த்த கணக்குப்பிள்ளை, "மாசிலாமணி என்று ஒருவர் வருவார்ன்னு ஐயா சொன்னார். நீர்தானா அது?" என்று கேட்டார்.