"இதோ வந்துகிட்டே இருக்கே. ஐயாவுக்கும் சேர்த்துக் கொண்டு வரச் சொன்னேன்." என்றார் கணக்குப்பிள்ளை. அதே சமயத்தில் தவசிப் பிள்ளைகள் இருவர் பெரிய வெள்ளித் தட்டுக்கள், வெள்ளி டம்ளர்களைத் தூக்கிக்கொண்டு வந்தனர். அடுத்தாற்போல் புட்டு, ஜாங்கிரி, தேங்காய்ப் பாலில் மிதக்கும் ஆப்பம், இட்டிலி, பொங்கல், மிக்ஸ்சர் இவற்றுகுத் தொட்டுக் கொள்ளக் கொச்சு, சாம்பார், சட்னி, மிளகாய்ப் பொடி - முதலிய எல்லாவற்றையும் வெள்ளிப் பாத்திரங்களிலேயே எடுத்து வந்து பரிமாறினர். காப்பியும் வெள்ளி டபரா டம்ளர்களிலேயே வந்தது. கடைசியில் தோல் சீவி நறுக்கிய மாம்பழம். ஆப்பிள் ஆகியன கொண்டு வந்து வைத்தனர்.கணக்குப் பிள்ளை பலமாக உபசாரம் செய்தார்.ஆனால் மாசிலாமணி தம்பதியரைப் பொறுத்தவரை அதற்கு அவசியமே இருக்கவில்லை.
"இதென்ன பெரிய விருந்துக்கே ஏற்பாடு செய்து விட்டீங்க!" என்றார் மாசிலாமணி ஏப்பத்தை அடக்க முயன்று தோல்வியுற்றவராக.
" இது என்னங்க, பிரமாதம்? 'பலகாரம் சாப்பிட வாங்க'ன்னு உங்களைக் கூப்பிட்டேன். பல-ஆகாரம் இருக்க வேணுமா இல்லையா? இந்த ஆப்பம் பாருங்கோ, இதை வெள்ளித் தட்டிலே போட்டுத் தேங்காய்ப் பால் விட்டுச் சாப்பிடலாம். ஆனால் மண் பாண்டத்திலேதான் செய்யணும்.வேறு எந்தப் பாத்திரத்தில் வார்த்தாலும் சுகப் படாது. இதற்காக நான் தனியே அளவான பாத்திரம் தயார் பண்ணச் சொல்றது. நம் வீட்டுத் தயிரும் அப்படித்தான். கட்டித் தயிராக இருந்தால் போதாது, அது சட்டித் தயிராகவும் இருக்கணும்.அதிலே ஓர் அலாதி ருசி.இந்த எண்ணெய் என்ன மணமா இருக்கு பாருங்கோ. கடையிலே வங்கினா கிடைக்குமா? நம்ம நிலத்திலே எள் பயிராகிறதில்லையா? கணக்குப் பிள்ளை போய்க் கிட்டத்திலிருந்து ஆட்டி எடுத்து வந்து விடுவார்..." என்று கூறிக் கொண்டே போனார் ரங்கநாத முதலியார்.
காப்பி ஆற்றிக் கொண்டிருந்த மாசிலாமணியின் கரம் இலேசாக நடுங்கத் தொடங்கியது. செல்வச் செழிப்பு என்று அவர் கேள்விப்பட்டு இருக்கிறார். ஆனால் இன்றுதான் நேரில் பார்க்கிறார். அடேயப்பா, என்ன பேச்சு பேசுகிறது அது! என்ன பாடுபடுத்துகிறது!
ஒருவாறு உணவருந்தி முடிந்ததும், "வாங்களேன், வீட்டைச் சுற்றிப் பார்க்கலாம்" என்றார் ரங்கநாதன்.
----------------
தொடரும்...