"ஆமாம்."
"நிஜமாகத்தானா? நீர்தான் மாசிலாமணியா?"
"'இவ்வளவு சாமானிய மனிதராய் இருக்கிறாரே, இவரையா வரச் சொல்லி யிருப்பார்?' என்று யோசிக்கிறீங்களா?"
"அதில்லை" என்று கணக்குப்பிள்ளை கூறிய தோரணையே, 'அதுதான்' என்று உணர்த்தியது. பிறகு அவர், "வாங்க" என்று அழைத்துச் சோபாவில் அமரச் செய்தார். அவர்கள் அதன் முனையில் பட்டும் படாமலும் தயக்கத்துடன் அமர்வதைப் பார்த்து, "சௌகரியமாக உட்காருங்க, ஐயா இப்பத்தான் தூங்கி எழுந்தாங்க, இப்ப வருவாங்க. நான் போய்ச் சொல்கிறேன்" என்றார். அப்புறம் திடுமென ஞாபகம் வந்தவர் போல, "அது சரி, நீங்கதான் ஐயாவோட புஷ்பவனம் தெரு வீட்டிலே குடியிருக்கிறதா?" என்று வினவினார்.
"ஆமாம், எதற்காகக் கேட்கிறீர்கள்?"
"இரண்டு மாதங்களாக வாடகை வரவில்லை; முன்பணமும் ஏதும் தரவில்லை..." என்று கணக்குப்பிள்ளை கூறி வரும்போதே மாசிலாமணிக்கு ஜுரம் கண்டது போலாயிற்று. அவர் எழுந்து கொண்டார்.
"ஏன் எழுந்துட்டீங்க?" என்று அதட்டலாகக் கேட்டார் கணக்குப்பிள்ளை. அந்தத் தொனியே மாசிலாமணியை மீண்டும் உட்கார வைத்து விட்டது.
"ஐயாவிடம் ஞாபகப் படுத்திவிட்டுப்போய் வாடகை வசூல் பண்ணிக் கொண்டு வருகிறேன் " என்று கிளம்பினால், ஒவ்வொரு தடவையும், 'அங்கே நீ போக வேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன்; மற்ற வேலைகளைக் கவனி" என்பார்.
இவராவது வசூல் செய்வாரா என்றால் அதுவும் கிடையாது. வெறும் கையோடு திரும்பி, 'மறந்துட்டேன்' என்பார்.அவருக்கு எங்கே ஞாபகம் இருக்கும் இதெல்லாம்? நான்தான் நினைவு வைத்துக் கொண்டு பிராணனை விடனும்."