"நீங்கள் எனக்காக ஒரு காரியம் செய்வீர்கள் என்றால் நான் இந்தத் திருமணத்துக்கு மனப்பூர்வமாகச் சம்மதிக்கிறேன்" என்றாள்.
"என்ன?" என்று கேட்டார் முதலியார்.
"என்னைப் படிக்க வைக்க வேண்டும். எஸ். எஸ். எல். ஸி மட்டுமில்லை. அதற்கு மேலே கல்லுரிப் படிப்பும் நான் பெற வேண்டும். டாக்டராக அல்லது வக்கீலாக என்னை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த ராமப்பட்டணத்திலேயே எல்லோரும் அதிசயிக்க நான் தொழில் நடத்த வேண்டும். செய்வீர்களா?"
ரங்கநாத முதலியார் தாம் சற்றும் எதிர் பார்க்காத இந்தக் கோரிக்கையைக் கேட்டுச் சில விநாடிகள் பிரமித்துப் போனார். பிறகு பெரிதாகச் சிரித்தார்.
"எதற்குச் சிரிக்கிறீர்கள்? பைத்தியக்கார ஆசை என்றா?"
"சேச்சே! அதெல்லாம் இல்லை, கமலா. நீ கோரிக்கை என்றதும் நான் ஏதேதோ அபத்தமான கற்பனைகளில் இறங்கிவிட்டேன். உன்னுடைய பரிசுத்தமான மனத்தை உணராத மூடனாக, சொத்தையெல்லாம் உன் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்று நீ கேட்கப் போகிறாய் என்று நினைத்து விட்டேன். என்னை மன்னித்துவிடு, கமலா. இத்தனை எளிய, சாமானியக் கோரிக்கை என்றதும் மகிழ்ச்சி தாங்கவில்லை எனக்கு. கமலா! டாக்டருக்கு உன்னைப் படிக்க வைப்பது மட்டுமில்லை. நீ பட்டம் பெற்று வந்ததும் தலைவியாக விளங்கிப் பணியாற்ற இந்த ராமப்பட்டணத்தில் ஒரு தர்ம ஆஸ்பத்திரியே கட்டித் தருகிறேன். போதுமா?"
கமலா சட்டென்று கிழக்கு முகமாக அவர் முன் விழுந்து வணங்கினாள். அவள் நிமிர்ந்த போது அவரது வலக்கரம் அவள் சிரத்தைத் தொட்டு ஆசிர்வதித்தது.
----------------
தொடரும்...