"நான்ஸென்ஸ்! என்ன விளையாடறீங்களா? இல்லே குடிச்சுட்டு வந்தீங்களா? என் டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. கெட் அவுட்!"
"எக்ஸ்கியூஸ் மி ஸார்! கோபப்படாதீங்க. அவங்க பேச்சுக்கு நாங்க மதிப்புக் கொடுக்கலைதான். ஆனாலும் டியூட்டியைச் செய்தாகணுமே!"
கோவர்த்தனனுக்கு எரிச்சலாக வந்தது. இன்று ஒரே கடமை வீரர்கள் மயம். பவானி நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதால் ஒத்திகைக்குப் போக வேண்டியது தன் கடமை என்கிறாள். வீட்டுக்கு வந்தால் மணி குடிக்கக் கூடாது என்று எச்சரிப்பது தன் கடமை என்கிறான். போதாக் குறைக்கு இந்த ஸி.ஐ.டி.க்கள் வேறு கடமையைச் செய்ய வந்து விட்டார்கள்! "சரி, டியூட்டியைச் செய்தாச்சுல்ல? என்னைப் பார்த்தாச்சு. நான் அவனைப் போலில்லை யல்லவா? நீங்கள் கிளம்பலாம். எனக்கு வேலை இருக்கு."
"ஸாரி ஸார். அவங்க சொன்னதிலே அவ்வளவா தப்பில்லைன்னுதான் உங்களைப் பார்த்ததும் தோன்றுகிறது. அந்த ஃபோட்டோ கிட்டத்தட்ட உங்களைப் போலவேதான் இருக்கு. உங்களுக்கு மீசை இல்லை, கண்ணாடி போட்டிருக்கிங்க, கொஞ்சம் 'யங்' காத் தெரியறீங்க. ஆனால் இவற்றால் ஒற்றுமைகளை மறைக்க முடியவில்லையே?"
கோவர்த்தனனுக்குத் திடும்மென்று உடல் நெடுக ஒரு மின்னல் பாய்ந்தது போல் இருந்தது. நிலை வாசலை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, "எங்கே கொடுங்கள் அந்தப் படத்தை" என்று கேட்டு வாங்கிப் பார்த்தார். அவர் கரம் லேசாக நடுங்கியது. தலையைச் சுற்றவும் ஆரம்பித்தது. அது மது அருந்தியதன் விளைவா அல்லது இந்தப் படத்தைப் பார்த்ததனால் உண்டான கலக்கமா? உடலின் பதற்றத்தையோ மனத்தின் உளைச்சலையோ அவர்களிடம் காட்டிக் கொள்ளாதிருக்கப் பெரு முயற்சி செய்து இயல்பாக நடப்பது போல் அடியெடுத்து வைத்து, அவர் வராந்தாவில் இருந்த பிரம்பு நாற்காலிகளுள் ஒன்றில் அமர்ந்தார். படத்தை ஒரு முறைக்கு இரு முறையாகப் பார்ப்பது போலும் யோசிப்பது போலும் சற்று நேரத்தைக் கடத்தினார். பிறகு "பாங்க் ராபரியா?" என்றார்.
ஸி.ஐ.டி.க்கள் வியப்படைந்தனர். "ஆமாம் ஸார்! பாங்குக் கொள்ளைதான். உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றார் அவர்களில் ஒருவர்.