"நான் சம்பவம் நிகழ்ந்தபோது கல்கத்தாவில்தானே இருந்தேன்?" என்றார் கோவர்த்தனன் "எனக்கு இந்தக் கேஸ் நன்றாகத் தெரியும். நான் லா பிராக்டிஸ் ஆரம்பித்து நன்றாக முன்னுக்கு வந்து கொண்டிருந்த சமயம். எங்கள் வக்கீல்கள் வட்டாரத்திலே ஒரே ஸென்ஸேஷன். இவன் கொள்ளையடிச்சான், அகப்பட்டுக் கொண்டு கம்பி எண்ணினான் என்பதால் இல்லை. அது சகஜம். இந்தப் பயலோட அப்பா ஊரிலே பெரிய மனுஷன். செல்வாக்குள்ளவன். பொது ஜனங்களுக்கு ஒரு விவரமும் தெரிய வராதபடி நியூஸ் பேப்பர் ஆபிஸ் முதலாளிங்களுக்கெல்லாம் ஃபோன் பண்ணி விஷயத்தை அப்படியே அமுக்கிட்டான். அதுதான் எங்களைப் பொறுத்த மட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. புரியுதா?"
"எஸ் ஸார்!"
"வழக்கறிஞர் வட்டாரத்திலே அதிகமாக இவனைப் பற்றிப் பேச மற்றொரு காரணம் இவன் ஒரு தீவிர சோஷலிஸ்டு, புரட்சி இயக்கத்துக்குப் பணம் வேண்டும் என்பதற்காகவே பாங்கைக் கொள்ளையடித்தான் என்பது என்ன நான் சொல்ற்து சரிதானா?"
ஆமாம் ஸார். மெட்ராஸுக்கு வந்த மெஸ்ஸேஜிலே அப்படித்தான் கண்டிருக்கிறது." "பெரிய கிரிமினல் அப்பா இவன். எப்பேர்ப்பட்ட கில்லாடியா யிருந்தால் சிறையிலிருந்து தப்பி வந்திருப்பான்! சீக்கிரமே பிடிச்சு மறுபடியும் உள்ளே தள்ளலேன்னா சமூகத்துக்கே ஆபத்து. அண்டர் கிரௌண்ட் இயக்கத்துக்கு ஆதரவா இவன் என்ன வேணுமானாலும் செய்வான். கொலைக்குக் கூடத் தயங்க மாட்டான். நீங்க என்ன இப்படி அலட்சியமா இருக்கீங்க?"
"இல்லை ஸார்! எங்களால் முடிந்த்ததையெல்லாம் செய்துக்கிட்டுத்தான் இருக்கிறோம்."
"அப்படிச் சொல்லிப் பிரயோஜனமில்லே! இப்ப எங்கிட்ட எதுக்கு வந்தீங்க? இவனைக் கண்டு பிடிக்க முடியல்லேன்னு ஒப்பாரி வைக்கவா? யூ மஸ்ட் ஃபைண்ட் ஹிம். அதுவும் சீக்கிரமாப் பிடிக்கணும். இல்லேன்னா போலிஸ் இலாகாவுக்கே அவமானம். நானே உங்களைப் பற்றி புகார் பண்ணும்படி யிருக்கும். இப்போ யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. தெரியுமல்லவா? யுத்த முயற்சிக்கு இந்த அண்டர் கிரௌண்ட் பேர்வழிங்க பெரிய முட்டுக்கட்டை என்பதைப் புரிஞ்சுக்கிட்டிருக்கீங்களா!"