Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 37 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 37 -- கப்பல் போன்ற கார்
கல்யாணம் தனது காரின் ஹாரனை அழுத்தினான். இஞ்சின் போட்ட கடபுடா சத்தத்துக்கும் மேலாக அது, "பாம்! பபாம்! பாம்" என்று ஒலித்தது. அப்படி அவன் ஹாரனை உற்சாகமாக முழக்கியதற்குக் காரணம், சாலையின் குறுக்கே மாட்டு மந்தையோ அல்லது அதிகமான மனித நடமாட்டமோ இருந்ததால் அல்ல, தெரு ஓரத்தில் சென்று கொண்டிருந்த விசுவின் கவனத்தைக் கவரவே.
விசு ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு அலட்சியமாக நடந்து கொண்டிருந்தான். அது கல்யாணத்தை வியப்பில் ஆழ்த்தியது. வழக்கமாகக் கல்யாணம் காரில் செல்வதைப் பார்த்தால், கை காட்டி நிறுத்தி, "மாமா! மாமா! லிஃப்ட் மாமா? பள்ளிக்கூட வாசலில் விட வேண்டாம். அந்தத் தெரு முனையில் நிறுத்திண்டால் இறங்கிக்கறேன். நீங்க நேரே கோர்ட்டுக்கோ, கிளப்புக்கோ போய் விடலாம்" என்று கெஞ்சுவான் விசு. கல்யாணம் சும்மாவாவது சற்று நேரம் பிகு பண்ணிக் கொண்டிருந்து விட்டுப் பிறகு ஏற்றிக் கொள்வான். ஆனால் இன்று விசு வண்டியை நிறுத்தாததுடன், கல்யாணம் அழைத்தும் திரும்பிப் பார்க்கவில்லை. 'என்ன திடீர் கர்வம் வந்து விட்டது இந்தப் பயலுக்கு? அல்லது யாரேனும் என்னைப் பற்றி ஏதாவது தாறுமாறாகக் கூறிப் பேசிப் பழகுவதற்குத் தடை உத்தரவு போட்டிருக்கிறார்களா?' தெரிந்து கொள்ளாமல் மேலே செல்வதற்குப் பிடிக்கவில்லை கல்யாணத்துக்கு. சிறுவன் தானே என்று அலட்சியப்படுத்த அவன் சுபாவம் இடம் தரவில்லை.
காரைச் சாலை ஓரமாகச் செலுத்தி நிறுத்தினான். இடப் பக்கத்துக் கதவைத் திறந்து விட்டு, "ஏறிக்கொள் விசு" என்றான்.
"வேண்டாம் மாமா! எனக்கு டப்பா கார் பிடிக்காது! நீங்க போங்க!" என்றான் விசு.
"ஆமாம், நீ பெரிய கோமகன் பாரு! உனக்கு முன்னால் ரோல்ஸ் ராய்ஸ் கார் வந்துநிற்கும்!"
"ரோல்ஸ் ராய்ஸ் இல்லே மாமா; பிளிமத்! பெரிய்ய்ய்ய கார்! கப்பலத்தனை பெரிசு! அதிலேதான் இனிமேல் போவேன்!"