"இது ஆனந்தக் கண்ணீர் அக்கா!" என்று தட்டுத் தடுமாறி சொன்னாள் கமலா.
---- ----- ----------------- ------------
அன்றிரவு பவானி ரங்கநாத முதலியாரை அவர் வீட்டில் சந்தித்து நீதிமன்றத்தில் நடந்தனவற்றை யெல்லாம் விவரித்தாள். "ஏதோ தவறு நேர்ந்துவிட்டது; போனதை யெல்லாம் மறந்துவிடுங்கள். கமலாவுக்கும் கல்யாணசுந்தரத்துக்கும் திருமணம் நடப்பதுதான் பொருத்தமாய் இருக்கும். அவர்களை ஆசீர்வதியுங்கள்" என்றாள்.
அந்தப் பெண்ணையே கேட்டேன்; அவளே என்னை மணந்து கொள்ளச் சம்மதம் என்றாளே? ஏன் அப்படிச் சொன்னாள்? அதை விசாரித்துவிட வேண்டும்" என்றார் ரங்கநாதன்.
"அதைப் போய் அந்தச் சிறு பெண்ணிடம் கேட்டு அவளை மேலும் குழப்பி மனத் துயருக்கு உள்ளாக்கலாமா? கல்யாணம் அவளை உதாசீனம் செய்ததால் ஏற்பட்ட ஏமாற்றம். பெற்றோரின் வற்புறுத்தல் எல்லாமாகச் சேர்ந்து அவளைச் சம்மதிக்க வைத்திருக்கும்" என்றாள் பவானி.
இருந்தாலும் என்னை இப்படி அவமானப்படுத்தியிருக்க வேண்டாம். போகட்டும், கொஞ்ச நாள் யாத்திரை போய்விட்டு வருகிறேன். அது வரை என் சொத்துக்களை யெல்லாம் நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்" என்றார் ரங்கநாதன்.
அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பவானி வீடு திரும்பியபோது மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் அவள் மாமா குணசேகனுடன் தோட்டத்தில் நாற்காலிகள் போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
"வாம்மா, பவானி! மாஜிஸ்திரேட் புறப்படுவதாகச் சொன்னார். நான்தான் 'சற்று இருங்கள். பவானி வந்துவிடுவாள்' என்று கூறி உட்கார்த்தி வைத்தேன்" என்றார் குணசேகரன்.
"ரொம்ப நல்லதாய்ப் போயிற்று" என்றாள் பவானி. "மாசிலாமணி வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வது நிச்சயம் என்பதை மாஜிஸ்திரேட்டுக்கு இப்போதே தெரிவித்துவிடுகிறேன்."