வழக்கமாகக் கமலா இறங்கிக் கொள்வாள். அங்கிருந்து சிறிது தூரம் நடந்தால் அவளும் பவானியும் அடிக்கடி சந்திக்கும் இரகசிய இடமான அந்த மொட்டைப் பாறையை அடையலாம். அந்த இடத்திலிருந்து அவள் தொலைவில் தெரிந்த ராமப்பட்டண வீதிகளையும் பெட்டி பெட்டியான வீடுகளையும் நோக்கினாள். அதோ, கல்யாணத்தின் வீடு அதுதானா? அல்லது இதுவா? இப்பால் பெரிய ஏரி தகதகத்துக் கொண்டிருந்தது. அருகே அவள் எத்தனையோ தடவை ரசித்து மகிழ்ந்திருந்த சரக்கொன்றை மரம். இந்தப் பக்கம் மொட்டைப் பாறையில் அவள் ஆசையோடு செதுக்கிய வார்த்தைகள்: "கமலாவின் கல்யாணம்!" அவற்றை அவள் ஒருமுறை தடவிக் கொடுத்துவிட்டுப் பாறை மீது ஏறினாள். 'பகவானே, இரண்டு முறை உயிரை விட முயன்ற என்னைக் காப்பாற்றி அருளினாய். இந்தத் தடவை அப்படி ஏதும் செய்துவிடாதே! முதல் தடவை கல்யாணத்தையும் இரண்டாவது முறை பவானியையும் அனுப்பி என்னை மரணத்தின் வாயிலிருந்து காத்தது போல் இப்போதும் யாரையாவது அனுப்பிவிடாதே! இன்று எனக்குத்தான் வெற்றி கிட்ட வேண்டும்!' இப்படி எண்ணியவாறு கமலா பாறையிலிருந்து பாய்வதற்குத் தயாரானாள். கல்யாணத்தின் உருவம் மனமெல்லாம் நிறைந்திருக்க அதனை அகக் கண்ணால் பார்த்தபடியே குதிக்கத் தீர்மானித்தாள்.
அந்தச் சமயம் அவள் காதுகளில் அந்த முனகல் சத்தம் கேட்டது. "ஹூம், ஹூம்" என்று தாங்க முடியாத வேதனையை வெளிப்படுத்தும் முனகல் ஒலி.
கமலா பரபரப்புடன் இப்படியும் அப்படியும் பார்த்தாள். பிறகு பாறையிலிருந்து கீழே இறங்கிச் சத்தம் வந்த திசையை நோக்கி விரைந்தாள்.
அங்கே மற்றொரு சிறிய பாறைக்குப் பின்னால் அவள் கண்ட காட்சி அவளைத் திகைக்க வைத்தது!
கதர் ஜிப்பாவும் பைஜாமாவும் அணிந்த ஒரு வாலிபன் அங்கே ஒரு கல்லின் மீது தலை வைத்துக்கண்களை மூடி முனகிக் கொண்டிருந்தான். அவன் வ்லது தோளில் இரத்தம் கசிந்தும் உறைந்தும் ஜிப்பா சிவந்து காணப்பட்டது. அதோடு கடுமையான் ஜுரமும் அவனுக்கு இருப்பதாகத் தோன்றியது. கமலா தயங்கி அவன் நெற்றியில் உள்ளங்கையை வைத்துப் பார்த்தாள். அனலாகச் சுட்டது.
கமலாவின் உள்ளத்தில் பச்சாத்தாபம் பெருகியது,பயமாகவும் இருந்தது. சுந்தரமான களையான