நின்றாள்.
கல்யாணத்துக்கும் கஷ்டமாகப் போய்விட்டது. என்னதான் தனக்குப் பவானி மீது மதிப்பிருந்தாலும் கமலாவைக் கைநீட்டி அடிக்கத் தனக்கு உரிமை இல்லை என்பதை உணர்ந்தான். "மன்னிச்சுடு, கமலா! உன்னை அடித்த இந்தக் கையை வெட்டிவிடலாம் என்று ஆத்திரமாக வருகிறது எனக்கு. இருந்தாலும் நீ மற்றவர்களைப் பற்றி, அதுவும் பவானியைப் பற்றி அவதூறாகப் பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை" என்றான்.
"நான் ஒன்றும் கற்பனை செய்து கதை அளக்கவில்லை; நிஜத்தைத்தான் கூறினேன். வேண்டுமானால் பவானியின் வீட்டுக்கே நேரில் போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்!" என்றாள் கமலா. பவானியிடம் கொடுத்த வாக்கைக் காப்பதைவிடக் காதலனிடம் தான் பொய் பேசாதவள் என்பதை நிரூபித்துக் கொள்வது அவசரமாகவும் முக்கியமாகவும் பட்டது அவளுக்கு.
"என்னத்தைப் பார்க்கிறது?" என்றான் கல்யாணம், ஆத்திரத்துடன்.
"பவானியின் காதலனை" என்றாள் கமலா ரோஷத்துடன்.
"சீச்சி! பைத்தியம் முற்றிப் பிதற்றுகிறாய்! நான் வருகிறேன். உன்னை மதித்து உன் வீட்டு வாசலை மிதித்ததே தவறு!" கல்யாணம் கோபத்துடன் திரும்பி வாசல் பக்கம் போனான். கமலா ஓடிப் போய் வழி மறித்து நின்று, அவன் கரங்களைப் பற்றிக் கொண்டாள். கண்களில் நீர் பெருகித் தாரை தாரையாகக் கன்னங்களில் வழிந்தோட, "நான் பெரிய தவறு செய்து விட்டேன்; கோபத்தில் ஏதோ பேசிவிட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். பவானி அக்கா எனக்குத் தெய்வம் மாதிரி பல சந்தர்ப்பங்களில் உதவியிருக்கிறார்கள். அக்காவிடம் போய் எதையும் கேட்டு விடாதீர்கள்! உங்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்" என்றாள்.
"கண்டிப்பாக இதைப் பற்றிக் கேட்டு விட்டுத்தான் மறு காரியம் பார்க்கப் போகிறேன்! இப்போதே நேரே பவானி வீட்டுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன்!" என்றான் கல்யாணம்.
"ஐயோ! நான் அக்காவுக்குச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேனே; ஆத்திரத்தில் ஏதோ உளறி