அவள் கரங்களைப் பற்றி விரல்களை வருடினான். "எனக்குத் தெரியாதா அது பவானி? நான் இப்போது சொன்ன கதை உங்கள் இருவருடன் மட்டும் இருக்க வேண்டும். இது முதல் வரம். இரண்டாவது, உன் புகைப்படம் ஒன்று கையெழுத்துப் போட்டுத் தர வேண்டும். மூன்றாவது..... மூன்றாவது...."
"மூன்றாவது....?"
"கொஞ்சம் பணம் வேண்டும். நீண்ட தூரப் பயணம் அல்லவா?"
பவானி அழுதுகொண்டே சிரித்தாள்.
"அப்பாடா! இதைக் கேட்க நீங்கள் இவ்வளவு தயங்க வேண்டுமா? அதுவும் என்னிடம்?" என்றாள். தொடர்ந்து, "மூன்று வரங்களை நான் தருகிறேன்; பதிலுக்கு நீங்கள் எனக்கு ஒரே ஒரு வரம் கொடுங்கள்" என்றாள்.
"என்ன பவானி? திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டுப் போலீஸாருக்குப் பயந்து சதா ஓடி ஒளிந்து திரிந்து கொண்டிருக்கும் நான் உனக்கு என்ன வரம் தர முடியும்?"
"நீங்கள் போகும் இடத்துக்கு என்னையும் அழைத்துச் செல்லுங்கள். அதுதான் நான் வேண்டும் வரம். உங்களால் முடியாத காரியமில்லையே?"
"பவானி!" என்று அதுவரையில் மௌனமாக இருந்த அவள் மாமா குணசேகரன் அதட்டினார். "இது என்ன அசட்டுத்தனம்?"
உமாகாந்தனோ தேகமெல்லாம் புல்லரித்துப்போகச் சிலிர்த்துக் கொண்டான்.
"பவானி! நிஜமாகவா சொல்கிறாய்? நான் மேற்கொள்ளப் போகும் பயணம் எவ்வளவு ஆபத்தானது என்பது உனக்குத் தெரியாதா? தெரிந்தும் இந்தப் பரதேசியோடு புறப்பட்டு வரத் தயாராக இருக்கிறாயா? உன் காதல் அவ்வளவு ஆழமானதா? எவ்வளவு பாக்கியசாலி நான்!"