கோவர்த்தனன் அவன் தோள்களைத் தட்டிக் கொடுத்தார். உற்சாகமாக, " உன்னை என்னமோ என்று நினைத்தேன். ரொம்ப சாமர்த்தியமாகப் பேசுகிறாயே" என்றவர், சமையல் அறையிலிருந்து வந்து நின்ற மணியைப் பார்த்து," சோடா,ஐஸ் கொண்டு வா. அப்படியே கொரிக்க ஏதாவது வைச்சிருப்பியே, அதையும் எடுத்து வா" என்றார்.
"கூடவே கொஞ்சம் சர்க்கரையும் வேண்டும்" என்றான் கல்யாணம். மணி தன்னை அப்போது பார்த்த பார்வையில் ஒருவித எதிர்ப்பு குடிகொண்டிருப்பது கல்யாணத்துக்குப் புரிந்தது. ஆனால் ஏன், எதற்காக என்பதை அவனால் உணர முடியவில்லை.
"சர்க்கரை எதற்கு?" என்றார் கோவர்த்தனன்.
"கமலாவுக்கும் எனக்கும் கல்யாணம். பவானிக்கும் உங்களுக்கும் கல்யாணம். நீங்கள் என் வாயில் சர்க்கரை போடுங்கள். நான் பதிலுக்கு உங்கள் நாவை இனிக்கச் செய்கிறேன்"
"பேஷ், பேஷ்!" என்று தலையசைத்தார் கோவர்த்தனன்.
சில வினாடிகளில் உருளைக்கிழங்கு வறுவல்,வறுத்த முந்திரிப் பருப்பு, காரா பூந்தி, ஐஸ் சோடா, சர்க்கரை எல்லாம் வ்ந்து சேர்ந்தன.
அவற்றை வைத்துவிட்டு ஏதோ கூற விரும்பியவர் போல ஒரு கணம் தயங்கினார் மணி. அதற்குள், " நீ போகலாம்" என்று அவரை அனுப்பி விட்டார் கோவர்த்தனன்.
" இந்த சமையல்காரரை எங்கே பிடித்தீர்கள்?" என்றான் கல்யாணம்.
"ரொம்ப காலமாக எங்கள் வீட்டிலேயே இருக்கிறான். என்னைத் தூக்கி வளர்த்து எல் லாம் செய்திருக்கிறான். அதனால் அவனுக்குக் கொஞ்சம் சலுகை அதிகம். இப்போ நீ இங்கிருப்பதால் வாயை மூடிக் கொண்டு போய் விட்டான். இல்லாத போனால் நான் குடிக்கக் கூடாது, சிகரெட் பிடிக்கக் கூடாது என்று சண்டை பிடித்திருப்பான். அப்புறம் ஓர் அதட்டல் போட்டுத்தான் அவனை அடக்க வேண்டியிருக்கும். தினமும் இவனுடன் இது விஷயத்தில் ஒரு போராட்டம் நடத்துகிறேன். ஆனால் மனுஷன் ரொம்ப நல்ல மாதிரி. கமான் ஹெல்ப் யுவர் ஸெல்ஃப்"