கவலை இல்லை" என்ற கல்யாணம் திடீரென்று நினைத்துக் கொண்டவன் போலக் கேட்டான்: "ஏன் சார், நான் கேட்டால் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே...... உங்களுக்கும் உமாகாந்தனுக்கும் இடையில் முக ஜாடையில் நிறைய ஒற்றுமை இருக்கிறதே?"
"அது விஷயம் தெரியாதா, உனக்கு?" என்றார் கோவர்த்தனன். "அவன் என் சொந்தத் தம்பிதான்."
"அதானே பார்த்தேன். அவனைத் தேடிக் கொண்டு ஸி.ஐ.டிகள் அவன் போட்டோவை ஒரு சமயம் என்னிடம் ஏலமலைக் கிராமம் ஒன்றில் காண்பித்தார்கள். 'இவனை எங்காவது பார்த்ததுண்டா?' என்றார்கள். எனக்கு உடனே உங்கள் ஞாபகம் வந்தது. ஆனால் நான் ஒன்றும் சொல்லவில்லை. 'எதற்கு வம்பு' என்ற பேசாமல் இருந்துவிட்டேன்."
அதனால் என்ன? அவர்கள் வேறு பலரிடம் விசாரித்துக் கொண்டு கடைசியில் என்னைத் தேடியே வந்துவிட்டார்கள். அப்படி வந்ததே நல்லதாயிற்று. நான் என் அதிகாரத்தைக் காட்டியதில்தான் அவர்கள் சுறுசுறுப்படைந்தார்கள். இல்லாத போனால் அந்தச் சோம்பேறிகளாவது உமாகாந்தனைப் பிடிப்பதாவது?"
அது சரி சார், சொந்தத் தம்பியைப் பிடிப்பதில் நீங்கள் இவ்வளவு தீவிரம் காட்ட வேண்டுமா? அவனுக்குக் கடுமையான தண்டனை வழங்கத்தான் வேண்டுமா? தம்பியாச்சே என்று இலேசான தண்டனையுடன் விட்டுவிடக்கூடாதா?"
இப்படிக் கேட்ட கல்யாணம் கோவர்த்தனனுக்குப் பின்னால் அடர்ந்து உயர்ந்து வளர்ந்திருந்த குரோட்டன்ஸ் செடியின் மறைவில் ஏதோ அசைவது உணர்ந்து துணுக்குற்றான். அது சமையல்காரர் மணி என்பது தெரிந்ததும் அவனுக்குப் பரபரப்பு ஏற்பட்டது. 'எதற்கு அவன் இப்படி ஒளிந்திருந்து சம்பாஷணையை ஒட்டுக் கேட்கிறான்?" மணி மறைந்திருப்பதைக் கவனியாததுபோல் நடந்து கொண்டான் கல்யாணம்.
இதற்குள் இரண்டு தடவை பாட்டிலைக் கண்ணாடி டம்ளரில் கவிழ்த்த கோவர்த்தனன் கல்யாணத்தினிடம் ஏற்பட்டிருந்த மாறுதல் எதையும் கவனிக்கவில்லை. அவனுக்குப் பதில் கூறும் முகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.