Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 09 - சரோஜா ராமமூர்த்தி
2.9. கோமதியின் குறை
ஹாலில் இருந்த புத்தர் சிலையைத் துடைத்து வைத்து விட்டு, தோட்டத்தில் மலர்ந்திருந்த பெரிய ரோஜா மலரை எடுத்து வந்து சிலையின் பாதங்களில் வைத்தாள் பவானி. கீழே கம்பளத்தில் உட்கார்ந்து பாலுவுடன் ' கேரம்' ஆடிக் கொண்டிருந்த சுமதி "அத்தை! நீ ஏன் அன்றைக்கு டிராமாவுக்கு வரவில்லை. பாதியில் அப்பா, அம்மாவைத் தனியாக விட்டு விட்டு எழுந்து போய்விட்டாராமே . அம்மா சொன்னாள். நீ ஏன் அத்தை எப்பொழுதும் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? சுவாமிக்குப் பூஜை பண்ணுகிறாய். எங்களுக் கெல்லாம் வேலை செய்கிறாய். அம்மா கூடச் சொல்கிறாள். 'பவானி வராவிட்டால் என் உடம்பு தேறி இருக்காது. பாவம்! அவளைப் பார்த்தால் என் மனசு சங்கடப்படுகிறது' என்று. இனிமேல் என்னோடு வெளியே வாயேன் அத்தை. ஜெயஸ்ரீயின் வீட்டுக்குப் போகும் போது வருகிறாயா?" என்று கேட்டாள். பேச்சின் இடையில் அந்தக்குழந்தையின் குரல் கம்மிற்று. பளபளக்கும் அவள் விழிகளில் கண்ணீர் திரண்டு நின்றது.
பவானி வாஞ்சையுடன் சுமதியின் அருகில் வந்து உட்கார்ந்தாள். ஆசையுடன் அவள் தலையை வருடினாள். அப்புறம். 'கண்ணே ! பிறருக்கு உபகாரமாக இருக்க வேண்டும் என்பது ஒன்றுதான் என் ஆசை. வேறு ஆசைகளோ விருப்பங்களோ எதுவும் எனக்கில்லை. உனக்குத் தலைவாரிப் பின்னி மலர் சூட்டிப் பொட்டு வைத்தால் என் மனத்திலே ஆனந்தம் பொங்குகிறது. நல்ல உணவாகச் சமைத்து எல்லோருக்கும் பரிமாறினால் அவர்கள் சாப்பிட்டுப் பசி தீர்ந்தவுடன் என் வயிறு திருப்தியால் நிறைந்து விடுகிறது.
”இங்கே பார் சுமதி! இந்த மகானைப் பற்றி நீ உன் சரித்திரப் புத்தகத்தில் படித்திருப்பாய். பிறருடைய துன்பங்களுக்காக இரக்கப்பட்டு அன்பையும். அஹிம்சை யையும் தம் லட்சியமாகக் கொண்டு அரச போகத்தைத் துறந்தவரல்லவா இவர்?" என்று அருகில் மேஜை மீது இருந்த புத்தர் சிலையைக் காட்டிப் பேசினாள் பவானி. சுமதியும் பாலுவும் திறந்த வாய் மூடாமல் பவானி சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். புத்தரையும் காந்தி அடிகளையும் போற்றி வணங்குவதால் தான் அத்தை இவ்வளவு நல்லவளாக இருக்கிறாள் என்று சுமதி நினைத்துக்கொண்டாள்.
"அத்தை! அத்தை!" என்று சொல்லிக் கொண்டே சுமதி அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு