கன்னத்தில் இரண்டு முத்தங்கள் கொடுத்தாள்.
சுமதி தன் அம்மாவை முத்தமிடுவதைப் பார்த்து ”ஹே! ஹே!" என்று சிரித்தான் பாலு.
"எதற்கெடுத்தாலும் சிரிப்புத் தாண்டா உனக்கு" என்று பவானி அவனைக் கோபித்துக் கொண்டாள்.
மாடியில் இருந்த கோமதி கீழே இறங்கி வந்தாள். மூன்று நாட்களாக அவளுக்கு மறுபடியும் உடம்பு சரியில்லை. நாடகத்தில் நாகராஜன் பாதியில் அவளை விட்டு விட்டு எழுந்து போனவுடன் மனம் சோர்ந்து உட்கார்ந்திருந்தாள் கோமதி. நாடகத்தில் பல ரசமான காட்சிகள், நடனங்கள், சம்பாஷணைகள், பாட்டுக்கள் இருந்தும் அவளால் ஒன்றையுமே ரசிக்க முடியவில்லை. 'எதற்காக வந்தோம்' என்று அலுத்துக் கொண்டாள். ஜோடி ஜோடியாக உட்கார்ந்து நாடகம் பார்க்கும் தம்பதிகளைப் பார்த்துப் பெருமூச்செறிந்தாள் கோமதி. கடைசிக் காட்சி நடந்து கொண்டிருந்தபோது. அலுப்புடன் வெளியே வந்து பார்த்தாள். நாகராஜனே காருடன் வந்திருந்தான். நாடகம் முடிவதற்கு முன்பே மனைவி வெளியே வந்து விடவே, "என்ன? ஒன்றும் நன்றாக இல்லையா? எனக்கு அப்பொழுதே தெரியும்”, என்று ஆரம்பித்தான் அவன்.
"எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது; எனக்குத் தான் இருக்கப் பிடிக்கவில்லை. பிறந்த இடத்தில் தான் ஒண்டியாகப் பிறந்தேன் என்றால், புகுந்த இடத்திலும் ஒண்டிக் கட்டைதான்!" என்றாள் நிஷ்டூரமாக.
"யார் அப்படிச் சொன்னது?" என்றான் நாகராஜன் காரை 'ஸ்டார்ட்' செய்து கொண்டே. கோமதி பதில் ஒன்றும் கூறாமல் முகத்தை 'உர்' ரென்று வைத்துக் கொண்டிருந்தாள். மனைவியைத் திரும்பிப் பார்த்தான் நாகராஜன்.
"கோமு! ஒரு நெக்லெஸ் விலைக்கு வந்திருக்கிறது. எட்டாரத்க்குள் அடங்குமாம். பழைய வைரமாம். வாங்கிப் போட்டு வைத்தால் மேலே மூன்று நாலு வந்தால் விற்று விடலாம்!"
"அதை வாங்குவானேன், பிறகு விற்பானேன்? வாங்காமலேயே இருந்து விட்டால் அலுப்பே இல்லை."