"நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. அதைப் பாராட்டிச் சொல்லவே தங்களை அழைத்தேன். ஹூம்... நாடகத்தில் மீராவாக நடித்தாளே அந்தப் பெண் யார்? எந்த வகுப்பில் படிக்கிறாள்?" என்று நாசூக்காக விசாரித்தான் மூர்த்தி.
"ஐஸீ. அவரை, மிஸ் ராதாவைத் தானே கேட்கிறீர்கள்? அவள் எங்கள் கல்லூரியின் பழைய மாணவி. சென்ற வருஷம் தான் படித்து பி. ஏ, பாஸ் செய்திருக்கிறாள். சூடிகையான பெண், எஸ்... எஸ்... டாக்டர் ஸ்ரீதரன் இருக்கிறாரே. அவருடைய தங்கை."
மூர்த்திக்கு இதற்குமேல் விவரங்கள் தேவை இல்லை. தேவையாக இருந்தாலும், ஒவ்வொன்றையும் விசாரித்தால் நன்றாக இராதென்று நினைத்துக்கொண்டு "போனை' வைத்து விட்டு வெளியே வந்தான். அவனுக்கு இருந்த உற்சாகத்தில் அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் நுழைந்து 'ஐஸ்க்ரீம்' வரவழைத்துச் சாப்பிட்டான். நேராக டவுனில் இருந்து கோடம்பாக்கம் செல்லும் பஸ்ஸில் புறப்பட்டான்.
வடபழனி செல்லும் பாதையில் பஸ்ஸிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தான் அவன். கொஞ்ச தூரம் சென்றதும், ஒரு சிறிய காம்பவுண்டுக்குள் இருந்த கட்டடத்தின் வாசலில் போர்டு ஒன்று தொங்குவதைக் கவனித்தான். 'டாக்டர் ஸ்ரீதரன் எம். பி. பி. எஸ் . மருத்துவ சாலை' என்று போட்டிருந்தது. பகல் வேளையானதால் கதவு பூட்டப்-பட்டிருந்தது. தாழ்வாரத்தில் இருந்த பெஞ்சியில் காவல்காரன் மட்டம் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். மெதுவாகக் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்று “ஐயா! ஐயா!" என்று அவனை எழுப்பினான் மூர்த்தி.
அவனுக்கு நல்ல தூக்கம். ”பகல் வேளைகளில் டாக்டர் இங்கே வரமாட்டார் ஐயா! வீட்டிலே போய்ப் பாரு" என்று சொல்லிக்கொண்டே திரும்பிப் பார்த்துத் தூங்க ஆரம்பித்தான் அவன்.
"அங்கேதான் போகிறேன். விலாசம் சொல் ஐயா" என்று மறுபடியும் அவனை எழுப்பிக் கேட்டான் மூர்த்தி. காவல்காரனுக்குத் தூக்கம் தெளிந்து விட்டது.
"என்னய்யா சும்மாத் தொந்தரவு பண்றீங்க! ரயில்வே லயன் ஓரமாப் போவுது பாருங்க ரோடு. அந்த ரோடு கடைசியிலே இருக்குதுங்க அவர் பங்களா" என்று கூறிவிட்டு, சட்டைப் பையில்