மூர்த்தியின் கம்பீரமான உருவத்தைப் பார்த்துப் பரவசமெய்தினாள் அந்தப் பேதைப் பெண். அவனுடைய ஆழ்ந்த பார்வையும், கபடச் சிரிப்பும் அவள் மனதுக்குப் பிடித்துப் போயிற்று. அவன் மேல் உண்மையான அன்பு - அதாவது காதல் - ஏற்பட்டது
அவளுக்கு.
காதலர்கள் இருவரும் அந்த வீட்டுத் தோட்டத்து ஊஞ்சலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் வெகு நேரம்.
நாகராஜனின் வீட்டில் சுமதிக்கு டாக்டர் ஸ்ரீதரன் வந்து பார்த்தபோது ஜுரம் அதிகமாகத்தான் இருந்தது. மருந்து கொடுத்துவிட்டு. ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி பவானியிடம் கூறினார் அவர்.
முதலில் சாதாரண ஜுரம் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். நாலைந்து நாட்களுக்கு அப்புறம் ஜுரத்தின் வேகம் அதிகமாயிற்று. தன் நினைவை இழந்து படுக்கையில் கிழித்த நார் போல் கிடந்த சுமதியைப் பவானியும், கோமதியும் நாகராஜனும் கவலையுடன் பார்த்தார்கள்.
ஸ்ரீதரன் 'டைபாய்ட்' ஜூரமாக இருக்கலாம் என்று அபிப்பிராயப் பட்டார். கோமதி வெல வெலத்துப் போய்விட்டாள். அவளுக்குத் தலையைச் சுற்றி மயக்கம் வரும் போல் ஆகி விட்டது.
"அதனால் ஒன்றும் பயமில்லை. மூன்றாவது வாரம் இறங்கிவிடும். பயப்படாதீர்கள்" என்று தைரியம் கூறினார் டாக்டர்.
பவானியின் மனத்தில் சொல்ல முடியாத வேதனை நிரம்பியிருந்தது. வியாதிக்-காரர்களைப் படுக்கையில் படுக்கவைத்துச் சிசுருஷை செய்யவே அவள் பிறந்தவள் போலும்! கணவன் வாசுவைப் பல மாதங்கள் படுக்கையில் வைத்துப் பணிவிடை செய்தாள். அதன் பிறகு கோமதியை மூன்று மாதங்கள் வரையில் கவனித்துக் கொண்டாள். இப்பொழுது சுமதி