கையை மறுபடி மறுபடி அழுத்தித் துடைத்துக் கொண்டே நிற்கும் ஸ்ரீதரனின் முகத்தைப் பார்த்த பவானி, "டாக்டர்!" என்று அழைத்தாள்.
"பவானி உங்களுடன் நான் சாவகாசமாகச் சில! விஷயங்கள் பேசவேண்டும். ஒன்று சொல்ல மறந்து விட்டேன், அடுத்த திங்கட்கிழமை ராதாவுக்கு கல்யாணம். பத்திரிகை வரும். நீங்கள் எல்லோரும் வரவேண்டும். அதற்குள் சுமதிக்கு உடம்பு சரியாகிவிடும். ஆனால் படுக்கையை விட்டு எழுந்திருக்கக்கூடாது”, என்றார் ஸ்ரீதரன்.
அதன் பிறகு இரண்டு மூன்று நாட்கள் வரையில் அவர் வரவில்லை. கல்யாணப் பத்திரிகை மட்டும் வந்தது. மேஜைமீது கிடந்த அந்தப் பத்திரிகையை எடுத்துப் பார்த்தாள் பவானி.
"சௌ. ராதாவை.... சி. சாம்பமூர்த்திக்கு"
விவாகம் செய்து வைப்பதாக இருந்தது. பிள்ளையின் காலஞ் சென்ற தகப்பனாரின் பெயர் மட்டும் காணப் பட்டது. இன்னொரு முக்கியமான விஷயத்தைப்பற்றிக் குறிப்பிட வேண்டும். மூர்த்தி வேலை பார்த்து வந்த ஸ்தாபனத்தைப் பற்றிப் பவானிக்கு ஒன்றும் தெரியாது. ஆகவே சாம்பமூர்த்தியும் மூர்த்தியும் ஒருவர் தான் என்கிற சந்தேகம் பவானிக்கு ஏற்படவே இல்லை.
அன்று மாப்பிள்ளை அழைப்பு . வீட்டிலே எதுவாக இருந்தாலும் ஸ்ரீதரன் டிஸ்பென்சரிக்குப் போகாமல் இருக்க மாட்டார். அன்று காலையிலும் அவர் டிஸ்பென்சரிக்குப் போகும் போது நாகராஜன் வீட்டுக்கு வந்தார். அவசரமாகக் கூடத்தில் நின்று கொண்டே. "வீட்டில் யாரும் பெண்கள் பெரியவர்களாக இல்லை. இருந்தால் வந்து அழைத்திருப்பார்கள். நீங்கள் எல்லோரும் அவசியம் கல்யாணத்துக்கு வர வேண்டும்" என்று கூறிவிட்டுச் சென்றார்.
இரவு ஏழு மணிக்கு மேல் மாப்பிள்ளையை ஊர்வலமாகக் காரில் அழைத்து வந்தார்கள். நாகராஜன் வீட்டு வழியாக ஊர்வலம் வருவது தெரிந்ததும், பவானி கோமதி இருவரும் மாடியிலிருந்து ஊர்வலத்தைப் பார்த்தார்கள். ஊர்வலம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. அருகில் வரவர பவானி மணமகனைக் கூர்ந்து கவனித்தாள். பசுமலையில் சுமார் இரண்டு வருஷங்களுக்கு முன்பு பார்த்த மூர்த்தியேதான் இவன்!