”ஆஹா! மனித வாழ்க்கையில் தான் எத்தகைய அதிசயங்கள் நடைபெறுகின்றன. இதில் மூர்த்திக்கு ஏற்பட்ட அதிர்ஷ்டம் தான் என்ன? பணக்கார இடத்தில் படித்த- அழகிய- யுவதியைக் கைப்பிடிக்கும் பாக்கியம் இவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு அதிசயமான விஷயம்? டாக்டர் ஸ்ரீதரன் இந்த மாப்பிள்ளையை எங்கே தேடிப் பிடித்தார்?" என்றெல்லாம் எண்ணை வியந்தாள் பவானி.
"பவானி. மாப்பிள்ளை நன்றாகத்தான் இருக்கிறான்" என்று கோமதி தன் அபிப்பிராயத்தை தெரிவித்தாள்.
ஊர்வலம் மெல்ல நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. கூட்டத்தில் பார்வதி அம்மாளின் தலை தெரிந்தது . பசுமலையில் தன்னிடம் தாயை விட அன்பாக இருந்த அந்த அம்மாளைப் பார்த்துப் பேசவேண்டும் என்று பவானி ஆசைப்பட்டாள்.
கல்யாணராமன் ஸ்ரீதரனுடன் பேசிச் சிரித்தவாறு சென்றார். இடையில் ஜெயஸ்ரீ பட்டுப் பாவாடையும் தாவணியும் அணிந்து இவர்கள் வீட்டுக்கு வந்தாள். நேராக மாடிக்கு வந்து “மாமி , சுமதி எப்படி இருக்கிறாள்?" என்று விசாரித்தாள். அறைக்குள் எட்டிப் பார்த்து விட்டு, அடுத்த அறையில் உட்கார்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்த பாலுவைப் பார்த்தாள். பாலு முன்னைவிட இப்போது உயர்ந்து இருந்தான்.
"பாலு. எங்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு வாயேன்" என்று அழைத்த ஜெயஸ்ரீயை ஏறிட்டுப் பார்த்தான் அவன் . ஜெயஸ்ரீயும் வளர்ந்து தான் இருந்தாள்.
“உங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு வந்தால் என்ன தருவாய் ஜெயஸ்ரீ?"
”ஆமாம்.குறும்பைப் பார். கல்யாணத்துக்கு வந்தால் என்ன கிடைக்கும்? லட்டும் பாயசமும் கிடைக்கும் ...... நாளைக்கு உனக்கும் சுமதிக்கும் கல்யாணம் ஆகும்போது எனக்கு என்ன தருவாய்?" பின்னலில் வைத்துப் பின்னப்பட்டிருந்த பட்டுக் குஞ்சலங்களை முறுக்கியபடி சிரித்துக் கொண்டே கேட்டாள் ஜெயஸ்ரீ.
குழந்தைகளின் பேச்சுக்கு அர்த்தம் கிடையாதுதான். இருந்தாலும் அறைக்குள் இவற்றைக்