போதும்" என்றாள்.
நோயாளியைக் கவனிக்க வந்த டாக்டர். பவானி சொல்வதைக்கேட்டுச் சிறிது அப்படியே நின்றார். மூன்று வாரங்கள் வரையில் கருமமே கண்ணாக இருந்த பவானியைக் கவனித்தார் ஸ்ரீதரன். கொழுகொழுவென்றிருந்த அவள் கன்னங்களின் திரட்சியில் சிறு வாட்டம் கண்டு சுருங்கியிருந்தது. அவளுடைய கருநீல விழிகள்
தூக்கமின்மையால் சிவந்திருந்தன.
"பவானி! இனிமேல் நீங்கள் உங்கள் உடம்பைக் கவனித்துக் கொள்ள வேண்டும். நோயாளி தூங்கும் போது நீங்கள் விழித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நன்றாகத் தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
"குழந்தை இனிமேல் பிழைத்து விடுவாள் இல்லையா டாக்டர்?" என்று கேட்டாள் பவானி.
"பிழைத்து விடுவாள் அம்மா. உங்கள் கைராசி ரொம்பவும் நல்லது."
புன்முறுவலுடன் இப்படிக் கூறிய டாக்டரின் முகத்தைப் பார்த்தாள் பவானி. தெளிவான அந்த முகம் ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருக்கிற மாதிரி தோன்றியது.
அங்கிருந்த ’பேஸினி'ல் கை அலம்பிக் கொண்டே பவானி கொடுத்த துண்டை வாங்கி கைகளை துடைத்து கொண்டார் அவர்.
பொறுமையும் அன்பும் அழகும் உருவான அந்தப் பெண்ணினுடைய சோகச் சித்திரத்தை அவர் மலர் ஆராய்வதில் சிறிது நேரம் சென்றது. இந்தப் பெண்ணின் வாழ்க்கை இப்படியே கழிய வேண்டியது தானா? தமையன் வீட்டுக்கு உழைக்கிறாள். தனக்காக இல்லா பிறருக்காக உழைக்கும் உழைப்பில் இன்பம் காணுகிறாள். பவானியின் உள்ளம் எவ்வளவு விசாலமானது? மாசு மருவற்று இருக்கும் இந்த உள்ளத்தில் 'தனக்கு' என்கிற எண்ணமே இருக்காதா? எத்தனை பெண்கள் இந்தப் பவானியைப்போல நம் நாட்டில் இருக்கிறார்கள்? பெண் என்றால் தியாகம் என்பது தான் பொருளோ?'