"அத்தை பெரிய வகுப்பிலே படித்தால் புத்தகச் சுமை குறைந்து போகுமா?" என்று விசாரித்தாள்.
”ஏனம்மா அப்படி கேட்கிறாய்? தினம் இரண்டு மூன்று புத்தகங்கள் கொண்டு போனால் போதும். அவசியமானவற்றை நோட்டுப் புத்தகம் ஒன்றில் குறித்துக் கொண்டு வருவேன்" என்றாள் பவானி சிரித்துக் கொண்டு.
”எனக்கு இருக்கும் புத்தகங்களைச் சுமந்து கொண்டு போயே என் முதுகு வளைந்து விட்டது அத்தை" என்று கூறி முதுகை வளைத்து அவள் எதிரில் நடந்து காண்பித் தாள் சுமதி.
கூடத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சிரித்தார்கள். கோமதி உள்ளேயிருந்து பவானிக்குச் சிற்றுண்டியும் காப்பியும் கொண்டு வந்து கொடுத்தாள். பவானி அந்த வீட்டுக்கு வந்த பிறகு கோமதியின் குணத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. படிப்படியாக அவளிடமிருந்த சோம்பல் நீங்கிவிட்டது. 'தான் ஒரு நோயாளி' என்று சதா டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தவள், இப்போது தெம்புடன் இருந்தாள். வீட்டில் ஓடி ஆடி வேலைகளை செய்வதால் உடலுக்குத் தெம்பும் உள்ளத்துக்கு மகிழ்ச்சியும் ஏற்படுவதை உணர்ந்தாள். பவானிக்கு மன்னியின் திறமையைப் பார்க்கும் போது சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருந்தது.
சிற்றுண்டி சாப்பிட்டு முடித்த பிறகு உடை மாற்றிக் கொண்டு கொல்லையில் மலர்ந்திருந்த மலர்களை மாலையாகத் தொடுத்து படங்களுக்குப் போட்டாள் பவானி. அவள் உள்ளத்திலே உவகையும், களிப்பும் நிரம்பி இருந்தன.
கண்ணை மூடிக்கொண்டு தன் இஷ்ட தெய்வமாகிய நடராஜப் பெருமானின் படத்தின் முன்பு கரங்குவித்து நின்றிருந்தாள் பவானி. அமைதி நிலவும் அப்பெரு மானின் முகத்தில் இருக்கும் புன்னகையைக் கவனித்தாள் ஒரு விநாடி. கண்களைத் திறந்து, டாக்டர் ஸ்ரீதரனுக்கு அந்த அமைதியும், கருணையும் இருப்பதாக அவள் மனத்துக்குத் தோன்றியது.
"அம்மா பவானி!" என்று அவர் அழைத்த குரலில் ஆண்டவனின் குரலும் கேட்டது அன்று. தான் நம்பி இருக்கும் நடராஜன் தான் தன்னை இந்தத் தொழில் செய்யும்படிப் பணித்திருக்கிறான் என்று பவானிச்குத் தோன்றியது.