சற்று முன் இருண்டிருந்த அவர் மனத்தில் ஒளி பிறந்தது. வேதாந்தம் வந்தது. புதுச் செய்தி ஒன்றைப் பிரஸ்தாபித்தது. பவானியைப் பற்றிய எண்ணங்கள் காமாட்சியைப் பற்றிய முடிவு, எதுவுமே அவர் மனதில் நிலைக்கவில்லை. இவ்வளவு காலம் தாம் ஆற்றி வரும் பணியை. அந்த மகத்தான கடமையைத் தொடர்ந்து ஆற்றவே ஸ்ரீதரன் விரும்பினார். அந்த விருப்பம் அவர் மனத்தில் பலமாக எழுந்ததும், அவர் உள்ளம் தெளிவு பெற்றது. நிம்மதியுடன் அப்படியே உறங்கிப்போனார்.
அங்கிருந்து கிளம்பிய வேதாந்தம் நேராக வீட்டுக்குச் செல்லவில்லை. தமது நண்பர்களுடைய வீட்டுக்குப் போனார். அங்கு அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பேச்சு பலதரப்பட்டதாக இருந்தாலும் அவர் மனம் திரும்பத் திரும்ப அன்று பகல் ஸ்ரீதரனிடம் அவர் கேட்ட விஷயத்துக்கே தாவிக் கொண்டிருந்தது. சுமார் நான்கு மணிக்கு கடற் கரைக்குச் சென்று. அப்படியே காரில் சாய்ந்து கடற் காற்றை அனுபவித்தார். தேகத்தில் வெப்பம் ஏற்பட் டிருந்ததால் அதைத் தணிக்கக் குளிர்ந்த காற்றும், சுக சாதனங்களும் பயன் படலாம். உள்ளத்திலே வெம்மை சுழன்று மோதிக் கொண்டிருக்கும்போது அதைத் தணிக்கும் வல்லமை குளிர்காற்றுக்குக் கூட இருக்காது. "என்றுமில்லாமல் நல்ல பகல் வேளையில் வீட்டைவிட்டு கிளம்பி இப்படிச் சுற்றுகிறாரே ஐயா' என்று கவலைப் பட்டான் டிரைவர்.
”ஏன் ஸார்! உங்களுக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லையே. என்னவோ போல இருக்கீங்களே” என்று விசாரித்தான்.
”அதெல்லாம் ஒன்றும் இல்லை அப்பா? நீ பயந்து விடாதே” என்றார் வேதாந்தம்.
ஏறக்குறைய இருபது வருஷங்களாக அவரிடம் வேலை செய்து வரும் அந்த ஆசாமிக்கு அவர்கள் குடும்பத்தைப் பற்றித் தெரிந்து தான் இருந்தது. 'ஐயாவுக்குத் தம் மகளைப் பற்றிக் கவலை இருக்காதா?' என்று நினைத்துக் கொண்டான்.
மனத்தில் ஏற்பட்டிருக்கும் அந்த உளைச்சல் முழுவதும் நீங்கப் பெறாதவராக வேதாந்தம் மாலை ஆறு மணிக்கு மேல் தம் வீட்டுக்குக் கிளம்பினார்.
--------------
தொடரும்...