அவன் ஊரில் இல்லை என்றும் அவன் மனைவி மாத்திரம் அங்கே இருப்பதாகவும் யாரோ சொன்னார்கள். சேஷாத்திரியின் பிள்ளை ராமு வந்திருக்கிறானே கல்கத்தாவிலிருந்து. அவனைக் கேட்டால் விவரம் ஏதாவது தெரியும்."
பார்வதி வெற்றிலைத் தட்டை நகர்த்தி வைத்து விட்டு எழுந்தாள்.
”எனக்கு வேலைகள் முடிந்துவிட்டன. நானே போய்த் தகவல் கேட்டு வருகிறேன்" என்று சொல்லியவாறு சேஷாத்திரியின் வீட்டுக்குப் போனாள் பார்வதி.
அவள் அங்கிருந்து திரும்ப அரைமணி நேரமே பிடித்தது. இவ்வளவு சடுதியில் திரும்பிவிட்ட தன் மனைவியைப் பார்த்த கல்யாணம் திகைப்பு மேலிட "என்ன அவசரமாக வந்து விட்டாய்? வீட்டில் ராமு இல்லையா?" என்று கேட்டார்.
”இருந்தான். இல்லாமல் என்ன?"
“ஏதாவது சொன்னானா? கேட்டாயா?"
”சொன்னான். உங்கள் தங்கைக்கு இந்த மாதிரி ஒரு பிள்ளை பிறந்திருக்க வேண்டாம். அவள் புண்ணிய சாலி. இதையெல்லாம் கேட்டும் பார்த்தும் கஷ்டப் படாமல் கண்ணை மூடிவிட்டாள்."
கல்யாணம் பதட்டமே அடையவில்லை. பொறுமையுடன் உட்கார்ந்திருந்தார்.
”மூர்த்திக்கு வேலை போய்விட்டதாம். அதோடு இல்லை. சொல்லவே மானக் கேடாக இருக்கிறது . ஆபீஸ் பணத்தைக் கையாண்டு விட்டதாக அவனைப் போலீசில் பிடித்து அடைத்து வைத்தார்களாம்."
பார்வதி வளர்த்த பாசத்தினால் மளமளவென்று கண்ணீர் பெருக்கினாள்.
"ஹும்.......... ஈசுவரா!" என்று பெருமூச்சு விட்டார் கல்யாணராமன்.
”சம்பந்தி வீட்டார் இதை நமக்குத் தெரிவிக்க வில்லை பார்த்தீர்களா? எனக்கு அப்பொழுதே