அந்த வயதில் எனக்குக் காம உணர்ச்சி இருந்தது என்று கூறமுடியாது. பொதுவாக அழகு எல்லாரையும் - குழந்தைகளையும் - கவரும் அல்லவா? கற்பகத்தின் தோற்றமும் பார்வையும் பேச்சும் அப்படி என்னைக் கவர்ந்தன. வெறுங்களிமண்ணை எடுத்து அணைத்துக் கொள்கின்றவர் யார்? அதுவே நாயாக, பூனையாக, கிளியாக, கொக்காக வடிவு பெறும்போது எந்தக் குழந்தையும், அந்தக் களி மண்ணைத் தனது தனது என்று எடுத்து அணைத்துக் கொள்கிறது. கற்பகத்தினிடம் எனக்கு ஏற்பட்ட கவர்ச்சியும் அப்படிப்பட்டதுதான். கற்பகம் விடைபெற்றபோது பாக்கியம் கட்டி அணைத்து முத்தம் கொடுத்ததற்கும் காரணம் என்ன? அழகை நுகரும் ஆற்றல் அந்த அம்மாவின் உள்ளத்தில் மிகுதியாக இருந்ததுதான் காரணம். இவ்வளவு ஏன்? சந்திரனை என் தாய் அடிக்கடி பாராட்டியதற்கும் கல்வி அதிகாரி முதல் நெல்லிக்காய் விற்பவள் வரையில் எல்லோரும் போற்றியதற்கும் காரணம் அதுதானே.
அதனால், கற்பகம் பிரிந்து சென்று சில நாள் ஆன பிறகும் அவளுடைய அழகு வடிவம் என் மனத்தில் நின்றது. அவளை மீண்டும் காணவேண்டும் என்ற ஆசையும் அரும்பியது. சித்திரை பிறந்ததும் பள்ளிக்கூட முடிவுத் தேர்வு வந்தது. சந்திரனும் நானும் நன்றாகப் படித்து எழுதினோம். கணக்குத் தவிர மற்றப் பாடங்களில் நான் நம்பிக்கையோடு இருந்தேன். ஆங்கிலத்திலும் தனக்கே முதன்மை கிடைக்க வேண்டும் என்று சந்திரன் பெருமைப்பட்டுக் கொண்டான்.
தேர்வு முடிந்ததும் சந்திரனும் அத்தையும் ஊர்க்குச் செல்ல ஏற்பாடு செய்தார்கள். அவர்களோடு பெருங்காஞ்சிக்கு போகவேண்டும் என்றும், கற்பகத்தைப் பார்க்க வேண்டும் என்றும் உள்ளம் தூண்டியது. உபசாரத்துக்காகவாவது சந்திரனும் அத்தையும் அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். அவர் மூட்டை கட்டும் முயற்சியில் இருந்த படியால், என்னை அழைக்க மறந்துவிட்டார்கள். நான் நேரே அம்மாவிடம் போய், "அம்மா! நானும் அத்தையோடு அவர்களுடைய ஊர்க்குப் போய்வரட்டுமா அம்மா" என்றேன்.
"உன்னை வரச் சொன்னார்களா?" என்றார் அம்மா.
"ஆமாம் அம்மா! போன மாதமே சொன்னார்களே"