"அப்படியானால் உன் அப்பாவைக் கேட்டுகொண்டு அவர் போகச் சொன்னால் போ."
இந்த அளவு அனுமதி கிடைத்தது போதும் என்று ஒரு குதி குதித்து, அத்தையிடம் ஓடினேன். மூட்டை கட்டிக் கொண்டிருந்த அவரிடம், "நானும் உங்கள் ஊர்க்கு வரப்போகிறேன் அத்தை!" என்றேன்.
"வா’ப்பா குழந்தை! வா. அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டுப் புறப்படு. சாப்பிட்டு முடிந்தவுடன் புறப்படலாம். ஊரிலிருந்தே வண்டிவரும்" என்று அத்தை கனிவுடன் கூறினார்.
இதைக் கேட்டதும் சந்திரனுக்கு எதிர்பாராத மகிழ்ச்சி ஏற்பட்டது. "பலே கெட்டிக்காரன் நீ! உனக்கு எப்படி’டா இந்த யோசனை ஏற்பட்டது? கட்டாயம், கட்டாயம் வர’ணும், தெரியுமா" என்றான்.
மளிகைக் கடையை நோக்கி ஓடினேன். பெருமூச்சு வாங்க அப்பாவின் எதிரே நின்று செய்தியைச் சொன்னேன்.
"இங்கே ஆடினது போதாது என்று அங்கே போய் ஆடப் போகிறாயா? போ, போ. என்னைக் கேட்காதே. உங்கள் அம்மாவைக் கேட்டுக் கொண்டு போ. அப்புறம் நான் அனுப்பிக் கெடுத்துவிட்டதாக அவள் குறை சொல்லக்கூடாது. அவள் பொறுப்பு" என்று சொல்லிக்கொண்டே இரண்டு ரூபாய் எடுத்து என் கையில் கொடுத்தார்.
சொல்ல முடியாத மகிழ்ச்சியோடு அங்கிருந்து விரைந்து வந்தேன். என் மகிழ்ச்சியைக் கெடுப்பதுபோல் கடை வேலையாள் தொடர்ந்து வந்து, வேலு! வேலய்யா! என்றான்.
"ஏன்?" என்று திகைத்து நின்றேன்.
"அப்பா கூப்பிடுகிறார்."
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல் மயங்கினேன். திரும்பி அப்பாவிடம் சென்றேன்.