“எம்மா... மொதல்ல நீ இடத்தை காலி பண்ணு. தம்பி துஷ்டி கேக்கற நிலையில இருக்கான்... நீ எக்காளமாவா பேசுற... அம்மாக்காரியாம்... அம்மா... போம்மா.”
“பாவி மொட்ட.. என்ன பேச்சு பேசறாள். எனக்கு மட்டும் மனசு துடிக்காமலா இருக்கும்.”
“உனக்கு வாய் துடிக்கிற அளவுக்கு மனசு துடிக்கல போம்மா.”
மரகதம், அம்மாவின் முதுகைப் பிடித்து தள்ளித் தள்ளி, அவளை அந்த அறைக்கு வெளியே கொண்டு போய் விட்டாள். அப்படியும் வெள்ளையம்மா காலஞ்சென்ற சீதாலட்சுமியை திட்டிக் கொண்டே உள்ளே வரப் போனாள். அதற்குள் மரகதம் கதவைத் தாளிட்டாள். பிறகு பித்துப் பிடித்து நின்ற சுயம்புவை தூக்கி நிறுத்தி, கட்டில் பக்கமாய் நகர்த்தி, அவனை உட்கார வைத்தாள். எதுவும் நடக்காதது போல பேசினாள்.
“சரி... எப்ப சாப்பிட்டியோ... முதல்ல சாப்பிடுடா...”
“என்னை உள்ள இருந்து ஏதோ ஒன்னு தின்னுக்கிட்டே இருக்குக்கா... பாம்பு, தவளையைப் பிடிக்குமே அப்படி... காக்கா ஓணானைக் கொத்திக் கொத்தி விளையாடுமே அப்படி... என்னால எப்படிக்கா சாப்பிட முடியும்? எக்கா நான் காலேஜுக்கு போகமாட்டேன்... சரியா...”
மரகதம் அவனுடன் பேசவில்லை. ஊரே வியக்கும்படி படித்து எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் தம்பிக்கு இப்படிப்பட்ட ஒரு எண்ணம் எப்படி ஏற்பட்டிருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டாள். அவன் உயர உயரப் போவதே கீழே விழுவதற்குத்தானோ என்று ஆயாசப்பட்டாள். கிட்டத்தட்ட சுயம்பு மாதிரியே அவள் விக்கித்து நின்ற போது, சுயம்பு அக்காவை உலுக்கினான்.
“எக்கா... எக்கா... உனக்கு பேசி முடிச்ச மாப்பிள்ளையை பாத்துட்டு வராம போய்ட்டேன்... எனக்கு வந்த கோளாறுல, உனக்கு வந்த மாப்பிள்ளையை மறந்துட்டேனே... நானெல்லாம் ஒரு தம்பியா... ஆனா ஒண்ணுக்கா... காலேஜுக்கு போகாதது மாதிரி அங்கயும் போகமாட்டேன்னு நினைக்காத... நீ மட்டும் இனிமே என்ன காலேஜுக்குப் போகாதபடி பார்த்துக்க... நாளைக்கே போய் மாப்பிள்ளைய பாத்துட்டு வந்துடறேன்...”