மரகதத்திற்கு இப்போது தம்பியிடம் என்ன பேச வேண்டும் என்பது தெளிவாகிவிட்டது.
“உங்க அக்காவைப் பத்தி என்னடா நினைச்சுக்கிட்டே... நீ காலேஜுக்குப் போகாம, நான் யாருக்கும் கழுத்தை நீட்டுவேன்னு நினைச்சியா... அதுதான் நடக்காது...”
“எக்கா... என்னக்கா சொல்லுற... அப்படியெல்லாம் தத்துபித்துன்னு பேசுனால... என்னால தாங்கிக்க முடியாது...”
“நீ காலேஜுக்கு போகாம இருந்தால்... அதுமட்டும் என்னால தாங்கிக்க முடியுமா...”
“எக்கா... எக்கோ...”
“ஆமாடா இது ஒப்புக்குச் சொல்ற வார்த்தையில்லடா... நீ படிப்பை விட்டுட்டு உன்ன சீரழிய விட்டுட்டு... இந்த அக்காவால வேற ஊர்ல இருக்க முடியாதுடா...”
சுயம்பு விக்கித்துப் போனான். அக்காவை அப்படியே கட்டிப்பிடித்து கேவினான். அவளோ கால்களை நீட்டி தம்பியை மடியில் போட்டுக் கொண்டு, ஊரில் படித்து முன்னுக்கு வந்தவர்களின் கதைகளை சொல்லப் போனாள். இதில் அக்கா, அம்மாவானாள். தம்பி மகனானான்.
-----------------
தொடரும்...