கரும்புள்ளி செம்புள்ளி குத்துறதுக்கு முகத்தைக் கொடுக்க முடியாது. இவங்க சொன்னமாதிரி அந்த முகத்தோட பஸ் ஸ்டாண்டுக்குப் போக முடியாது. நடு ராத்திரியில இவங்க கதவைத் தட்டி நம்ம தூக்கத்தைக் கெடுக்க விடப்படாது. இதுக்குமேலயும் இவனுவளுக்கு ‘நோட்ஸ்’ எழுதிக் கொடுக்கக்கூடாது.
அந்த ‘மூன்று மாதங்கள்’, அங்கேயே அறுபது மாதங்கள் இருந்ததுபோல் உருட்டுக் கட்டைகளை எடுத்துக் கொண்டன. துடைப்பக் கட்டைகளைத் தூக்கிக் கொண்டன. நிலைமையைப் புரிந்து கொண்ட மாணவத் தலைவர் வேட்பாளனும், பல ‘செமஸ்டர்’களில் பல பாடங்களில் ‘அரியர்ஸ்களை’ வைத்திருப்பவனுமான பொன்முகன், தனது சகாக்களோடு ஜகா வாங்கிவிட்டான். ஜூனியர்களால், சுயமரியாதைக்குச் சவால் வந்திருக்கிறதே என்ற கவலையல்ல. மாணவர்கள் பாட வாரியாகப் பிரியாமல், ஆண்டு வாரியாகப் பிரிந்தால், தான் ஜெயிக்க முடியாமல் போய்விடுமே என்ற பயம். பதவி கிடைக்க வில்லையானால் கட்சிக்குக் கோபம் வருமே என்ற உளைச்சல். அவர்கள் போனதும், எல்லா மாணவர்களும் சுயம்புவை சுகமாகப் பார்த்தார்கள். அவனை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போன அறைவாசிகளை வியப்போடு பார்த்தார்கள்.
எல்லாம் முடிந்து, எல்லோரும் தூங்கிவிட்டார்கள். சிறிது நேரம் சீனியர்கள் ஆயுதப்புரட்சி செய்ய வரலாமென்று, அதை எதிர்நோக்கி உருளைக் கட்டைகளோடும் ஜாமெட்ரி பாக்ஸ்களோடும் காத்திருந்த ஜூனியர்கள் அந்தக் களைப்பிலேயே உறங்கி விட்டார்கள். சுயம்பு குறட்டை போட்டுத் தூங்குவதில் அவன் அறைத் தோழர்களுக்கும் அளவில்லா மகிழ்ச்சி. ஆனாலும் காலையில் கண்விழித்த மூர்த்தியும், முத்துவும் கட்டிலைப் பார்த்தார்கள். ஒரு மணி நேரமாய் அங்கு மிங்குமாய்த் தேடிப் பார்த்தார்கள். சுயம்புவைக் காணவில்லை. சீனியர்களின் வேலையாக இருக்குமோ...
-----------------
தொடரும்...