பெட்டியைத் திறந்தான். பூட்டில்லாமல் போன பெட்டி. எந்த வகையிலும் சேர்க்கமுடியாத பெட்டி. மூர்த்தியும் முத்துவும் திணறினார்கள். அலங்கோலமாய் நின்ற சுயம்புவை அமங்கலமாய்ப் பார்த்துவிட்டு அந்தப் பெட்டிக்குள் ஆளுக்கொரு பொருளை அள்ளிப்போட்டார்கள். அழுக்குப் பாண்ட்களையும் சட்டைகளையும் மடித்து வைத்துவிட்டு, இடையிடையே சோப்பு, சீப்பு, கண்ணாடி ஹாங்கர்களைப் போட்டுவிட்டு, அவற்றிற்குமேல் புத்தகங்களை அடுக்கினார்கள். பிள்ளையார் குறுக்கிட்டார்.
“ஒங்களுக்குப் பிரயோசனப்படுற புத்தகங்களை எடுத்துக்குங்கப்பா... ஏடா... பெரியவன் ஒன் ஆசைத் தம்பிக்கு வாங்கிக் கொடுத்தியே... கணக்கு மெஷின்... அதை ஒன்னோட இந்தத் தம்பிகள் கிட்ட கொடு... எதுக்குடா பாய் தலையணையச் சுருட்டுறே. இவங்களும் எனக்கு பிள்ளிங்க மாதிரித்தாண்டா... நான் எப்பவாவது வந்தாலும் வருவேண்டா... ஒரு படிச்ச பிள்ளை போயிட்டாலும், எனக்கு இன்னும் ரெண்டு படிச்ச புள்ள இருக்காங்கடா...!”
பெட்டியைக் குடைந்து கொண்டிருந்த மூர்த்தி, திடுக்கிட்டு எழுந்தான். பிள்ளையார் அழுதிருந்தால்கூட அவனுக்கு அப்படி அழுகை வந்திருக்காது. அவரோ சிரித்தார். பற்களெல்லாம் கழண்டு விழப்போவதுபோல் சிரித்தார். அவனால் தாங்க முடியவில்லை. அசைவற்று நின்ற சுயம்புவைக் கட்டிப்பிடித்து, தேம்பினான். அவனோ, இப்போதுதான் உயிர்த்தெழுந்தவன்போல் அங்குலம் அங்குலமாய் மூர்த்தியைவிட்டு விலகிக்கொண்டிருந்தான்.
எல்லாவற்றையும் கட்டிப்போட்டாகி விட்டது. ஆறுமுகப் பாண்டி டிரங்க் பெட்டியைத் துாக்கிக் கொண்டான். பிள்ளையார் சூட்கேஸை எடுத்துக் கொண்டார். ஐந்தாண்டு காலத்திற்காகக் கொண்டு வரப்பட்ட உடமைகள் ஐந்து நிமிடத்திலேயே முடக்கப் பட்டன. மூர்த்தியும் முத்துவும் அவர்களை வழியனுப்பப் புறப்பட்டார்கள். மூர்த்தி அங்குமிங்குமாய்த் தேடிவிட்டு, “டேய் முத்து, பூட்டை எங்கேடா வெச்சே” என்று சொன்னபடியே, முத்துவைப் பார்த்தான். அவனோ-அந்த பாக்ஸர் முத்தோ தனது கம்பீரமான முகத்தைச் சுவரில் போட்டு அதில் கண்ணிரால் கோடுகள் போட்டுக் கொண்டிருந்தான். பிள்ளையார் அவன் அருகே போய் முதுகைத் தட்டிக் கொடுத்தபோது அவன் விம்மினான். வெடித்தான். பிள்ளையாரும் “என் மவனே, என் மவனே” என்று அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். மூர்த்தி தான் தன்னை அடக்கிக்கொண்டு சமாளித்தான்.
“நீங்க போய்க்கிட்டே இருங்க; நான் இவன சமாளிச்சிட்டு பின்னாலயே வாறேன்.... ஏய் முத்து...