ஓங்கியடித்து வைரப்பட்ட டேவிட்டின் கைகள் எதையோ எழுதிக் கொண்டிருந்தன. அவன் கையைப் பிடித்து எழுதுவதை நிறுத்த வைத்து, சுயம்பு சொன்னான்.
“என்னை வெளியேத்திட்டாங்க டேவிட்...”
“கேள்விப்பட்டேன். மோசமான நியூஸ். மாணவ அரசியல்வாதிக்கு உங்களைப் பலி கொடுத்துட்டாங்க. இருக்கவே இருக்கு அடுத்த வருஷம். மொதல்ல உங்க மனநிலையை நல்லா வச்சுக்கணும். சைக்யாட்ரிஸ்ட்கிட்ட போங்க தம்பி...”
“நான் ஒண்ணும் தம்பி இல்ல... என் மனநிலை சரியாத்தான் இருக்கு... என்னப் புரிஞ்சுக்கிற மனநிலை தான் உங்களுக்கு இல்ல... நான் ஒண்ணு கேட்பேன் தருவீங்களா?... டேவிட்...”
“உயிரைத் தவிர எதை வேணும்னாலும் கொடுக்கத் தயாராயிருக்கேன்.”
“ஒங்க போட்டோவைக் கொடுங்க...”
டேவிட், ஏதோ கேட்கப் போனான். சுயம்புவிற்கு மனநிலை முற்றிவிட்டதை அறிந்து அதிர்ந்தான். அவன் கேட்டது கிடைக்காமல் மேலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, எதையோ குடைந்து ஒரு போட்டோ பிரதியை எடுத்து, சுயம்புவின் சட்டைப் பைக்குள் வைத்தான். அவன் தோளைத் தட்டிக் கொடுத்தான். சுயம்பு, கண்ணிரும் கம்பலையுமாய் கேவினான்.
“நான் வாறேன்... டேவிட்... என் உடம்புல உயிரு இருக்கிற வரைக்கும் ஒங்களை மறக்க மாட்டேன் டேவிட். நீங்களும் என்னை அப்பப்ப நினைத்தால் அதையே பெரிய பாக்கியமா நினைப்பேன் டேவிட். மூர்த்திகிட்ட அட்ரஸ் இருக்கு. லெட்டர் போடுங்க டேவிட்... நானும் லெட்டர் போடுறேன் டேவிட்... என்ன மறக்க மாட்டீங்களே டேவிட்...”
சுயம்பு, டேவிட்டின் மார்பில் சாய்ந்தான். டேவிட் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான். பிறகு அவனை தனது தோளோடு தோளாய்ச் சேர்த்துக் கீழே இறக்கினான். மூர்த்தி நின்ற பக்கம் சுயம்புவின் கையைப் பற்றியபடியே சுயம்புவை இழுத்துக்கொண்டு போனான். பிள்ளையாரிடம் அவனை ஒப்படைத்துவிட்டு அவனுக்காக கர்த்தரிடம் ஜபிப்பதுபோல் தலை தாழ்த்தி நின்றான்.