“நீங்க எந்த ரூமு..”
“ஒம்போது...”
“ஒட்காருங்கக்கா. ஒங்ககூட ஆண்டாண்டு காலம் பழகுனது போல தோணுது!”
“எம்மாடி. ஒன் ஒரு சொல் போதும்... ஆமா ஒன் கோளாறு இப்ப எப்படி இருக்கு?”
சுயம்பு அந்தப் பெண்ணையே வைத்த கண் வைத்த படிப் பார்த்தான். அவள் அவனை உடம்பிற்குள்ளும் உள்ளத்திற்குள்ளும் ஊடுருவதுபோல் பார்த்தாள். அவன் முகத்தில் சின்னச் சின்ன கரடுமுரடுகள். அவளைப் பார்த்ததும் ஏதோ இலக்கை அடைய முடியவில்லையானாலும், அடையாளம் கண்ட திருப்தி.
அவள் அவன் தோளில் கை போட்டு, ஏதோ பேசப் போனாள். அவனும் தனது கஷ்டங்களை, நஷ்டங்களை கண்ணீரும் கம்பலையுமாய் சொல்லப் போனான். இதற்குள் ஒரு பின்தலைக் கைக்குட்டை. அவளை விரட்டியது.
“ஒன் ரூமுக்கு நான் வந்தால், நீ இங்க இருக்கியே... போம்மா... பெரிய பெரிய டாக்டருங்க வருகிற சமயம்...”
“ஒனக்கு வசதிப்படும்போது, ஒன்பதாம் நம்பருக்கு வா... ஒன்கிட்ட நிறைய பேசணும்!”
சுயம்பு தலையாட்டினான். நர்ஸம்மா, ஒப்புக்கு அவனையும், தின்கிற உப்புக்கு மெடிக்கல் தாளையும், உப்பு சப்பில்லாமல் பார்த்துவிட்டுப் போய்விட்டாள்.
சுயம்புவுக்கு மீண்டும் தனிமை வட்டியும் முதலுமாய் வந்தது. அவனுடன் போர் தொடுத்தது. ஒன்பதாம் எண் அறைக்குப் போனால், அங்கே இந்த நர்ஸம்மா. சுயம்பு திரும்பி வந்தான். கலியாண அழைப்பிதழை மீண்டும் படித்தான். இந்நேரம் மாப்பிள்ளை வீட்டார் வந்திருப்பார்கள். என்னை விசாரிப்பார்கள். அந்த ரெட்டைப் பின்னல்காரி, நான் பஸ்ஸுல அடிபட்டத