(Reading time: 9 - 17 minutes)
Vata malli
Vata malli

தத்துப்பித்துன்னு உளறிடப்படாதே. அதோட அவளப் பத்தி நான் யார்கிட்டவும் சொல்லவே இல்லன்னு சொல்லணுமே... அவள் கிடக்காள்... அந்த ‘ஆம்பளப் பயல்வ’ மூர்த்தியும் முத்துவும் வந்திருப்பானுவளே. அண்ணன் அழைப்பிதழ் அனுப்பி, லெட்டரும் போட்டதா சொன்னானே. ஒருவேள டேவிட்டும், வரலாமோ. நான் சொல்லி அண்ணன் அவருக்கும் அனுப்பி வச்சாரே... டேவிட்... டேவிட்... உங்களுக்கு மூணு லெட்டர் எழுதிட்டேனே டேவிட், ஒரு லெட்டருக்குக்கூட பதில் எழுதலையே டேவிட். ஒருவேள என் வீட்டுக்கு வந்திருக்குமோ... அண்ணன் தரலியே. அவனுக்கு எங்க நேரம்? கலியாணத்துக்கு வரச் சொல்லி எழுதியிருந்தேனே டேவிட். நீங்க வருவீங்களா... எனக்குத் தெரியும். நீங்க வருவீங்கன்னு. நீங்க அங்க வந்து ஒங்கள வரவேற்க, நான் இல்லாட்டால், நல்லாருக்குமா டேவிட்! அதோட அந்த ‘ஆம்பளப் பசங்கதான்' என்னப்பத்தி என்ன நினைப்பாங்க...”

  

சுயம்பு மெள்ள மெள்ளத்தான் ஒரு முடிவுக்கு வந்தான். அப்படி வந்ததும், அதுவே ஒரே ஒரு முடிவு என்று உறுதிப்படுத்திக் கொண்டான். அதேசமயம் அக்காவின் வாழ்க்கைக்கு எந்தக் குந்தகமும் வரக்கூடிய எதையும் செய்யக்கூடாது என்றும் உறுதி எடுத்தான். அதனாலேயே லுங்கியைக் கட்டப்போனவன், அதை வீசிப் போட்டு விட்டு, பாண்டை மாட்டிக்கொண்டு, முழுக்கைச் சட்டையையும் ‘இன்செய்து’ கொண்டு புறப்ப்டடான். “அதிக நேரம் இருக்கப்படாது. தாலி கட்டுன உடனேயே ஓடி வந்துடணும். அந்தப் பயல்வளையும், டேவிட்டையும் இங்கே வரச் சொல்லணும். கையில்தான், அண்ணன் கொடுத்த ரூபா இருக்கே... இங்கேயே ஹோட்டலுல வாங்கி கலியாணச் சாப்பாட்டைப் போட்டுடலாம்... டேவிட்டுக்கு, என்ன பிடிக்கும்னு முதல்லேயே கேட்டு வச்சுக்கணும். அவரு பக்கத்துல இருந்தே நானும் சாப்பிடணும்...”

  

சுயம்பு கதவைப் புத்திசாலித்தனமாய் உள் தாழ்ப் பாள் போட்டதுபோல், இடைவெளி இல்லாமல் இறுகச் சாத்தினான். வெளித் தாழ்ப்பாள் போடாமலே, புறப்பட்டான். அந்த மருத்துவமனைக்கு முன்னால் வந்து நின்ற ஐந்து நிமிடத்தில் அந்தப் பட்டிக்காட்டுக்குப் போகும் டவுன் பஸ் வந்துவிட்டது. ஏறிக்கொண்டான். ஒரு ரூபாய் ஐம்பது பைசா டிக்கெட்.

  

-----------------

தொடரும்...

Go to Vata malli story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.