அப்படியே எடுத்து எங்கிட்டே குடுத்தார். எங்கேட்டேர்ந்து ஒண்ணையும் எதிர்ப்பார்க்கலை."
வெங்குலட்சுமி ஆச்சர்யமாக கங்கம்மாவைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
"வயசுக்காலத்துலே தனக்கு சிச்ருஷை செய்ய பெண்டாட்டின்னு ஒருத்தி இருந்தாத்தான் ஊருக்கும், தர்மத்துக்கும் பயந்து நடப்பான்னு என்னைக் கல்யாணம் பண்ணிண்டாராம். வாய்க்கு ருசியா சமைச்சுப்போட்டேன். கம்பீரமா அவ்ளோ பெரிய வீட்டுலே மகாராணி இரும்புச்சாவிகள் குலுங்க வளைய வந்தேன். நெல்லும், வாழையும், பலாவும், மாவும் கொட்டிக் கிடக்கிற வீட்டிலே நடந்து வளைய வறதே ஒரு பாக்கியமா பட்டுதுடி வெங்கு. நான் என் பொறந்தாத்துலே பாதி நாள் பட்டினியா இருந்தவ. இப்படி அஷ்டலட்சுமிகள் நர்த்தனமிடும் வீட்டிலே நான் மகாலட்சுமியா இருந்தேன். அவர் நன்னாந்தான் இருந்தார். திடும்னு உடம்புக்கு முடியாமப் போயிடுத்து "கங்கம்மா! உன் மாதிரி ஒரு திட வைராக்கிய சாலியை நான் பார்த்ததில்லை. சரீர சுகம்தான் பிரதானம்-ஏன் அது இயற்கையானதும் கூட என்று நினைக் கிற பால்ய வயசு உனக்கு. அந்த ஆசைகளை பொசிக்கிண்டு ஏழு வருஷமா நீ நெறஞ்ச மனசோட எங்கிட்டே இருக்கியே"ன்னு அழுதார். வேண்டிய பணம காசு இருக்கு இஷ்டபடி இருக்கலாம்"ன்னு வேற சொல்லிட்டுப் போனார்.
ரயில் ஏதோ ஒரு ஐங்ஷனில் நின்றது. மேலே பலகையில் படுத்திருந்த பையனை கங்கம்மா எழுப்பினாள். பையன் பூஞ்சை யாக இருந்தான். "போயி, நாலு பொட்டலமும், காப்பியும் வாங்கிண்டு வாடா..." என்று வெள்ளிக் கூஜாவைக் கொடுத்து அனுப்பினாள். "என் தம்பி... எங்கம்மா அப்பாவுக்கு நான் மூத்தவ. இவன் கடைசி. இவன் பொறக்கறத்துக்கு முன்னாடியே நீ ஊரை விட்டுப்போயிட்டே. "
"படிக்கிறானா?"
"ஏதோ படிச்சான், சிலபேருக்கு எங்கே படிப்பு ஏர்றது, என்னோட துணையா இருக்கான். என் சொத்தையெல்லாம் யார் ஆளப்போறா, அவனுக்குத்தானே?...'
வெங்குலட்சுமி சிந்தனை வயப்பட்டிருந்தாள்.