சினிமா பாஸ் கொடுத்து அவளை வளைக்கப் பார்க்கும் சாயிராம். எதிர் வீட்டு காலேஜ் பையன் வீசும் கண் வீச்சு. கல்யாணமான பக்கத்து வீட்டுக்காரர் 'அடியே நர்மதா! இங்க சித்தே வந்துட்டுப் போயேன். மாமி ஒண்டியா அடுப்படியிலே கஷ்டப்படறா பாரு. தொட்டில்லே குழந்தை கிடந்து கத்தறது பாரு என்று விடுக்கும் அழைப்பு. அவர் மனைவிக்குத் தெரியாமல் வாங்கி வந்து கொடுக்கும் மல்லிகைப்பந்து.
“ஏதுடி இவ்வளவு பூ?"
"பக்கத்து வீட்டு மாமா வாங்கிக்கொடுத்தார்"
"அவர் ஏண்டி உனக்கு பூ வாங்கித்தரனும்? அப்படி யெல்லாம் வாங்கப்படாதுடி. "
"வாங்கிண்டா என்ன? அவர் ஆசையா வாங்கிண்டு வந்து குடுக்கறார். மாமிக்கு சொல்லாதே. என்னைக் கொன்னு புடுவாங்கறார். நான் ஏன் சொல்லப் போறேன் மாமான்னுட்டேன். நீதான் ஒரு முழம் பூ வாங்கி எனக்கும் மன்னிக்கும் கிள்ளிக் குடுக்கிறியே." தலை நிறைய பூ வைத்துக்கொள்ளும் ஆசையில் இந்தப்பாவிப் பொண் ஏமாந்துட்டு நிக்கப்போறதே என்று எத்தனை நாளைக்கு மருக முடியும்?
கங்கம்மா கூடையிலிருந்து பழங்களை எடுத்து வைத்தாள். தம்பி வாங்கி வந்த பொட்டலங்களைப் பிரித்தாள்.
"என்ன வெங்கு! ரயில்லே ஒண்ணும் சாப்பிடமாட்டியா? மடி ஆசாரமெல்லாம் வச்சுண்டு இருக்கியா?"
"சே...சே...அதெல்லாம் ஒண்ணும் இல்லேடி.'
“அப்ப சாப்பிடு..."